படப்பிடிப்பில் பஞ்சாயத்து.. 6 கேரவன்கள் .. 50 உதவியாளர்கள் கேட்டு அடம் பிடிக்கும் நடிகர்!
சென்னை: ரீல் ஜோடியாக அறிமுகமாகி, ரியல் ஜோடியாக மாறிய அந்த டோலிவுட் காதல் தம்பதியைப் பற்றித்தான் தற்போது சினிமா வட்டாரத்தில் ஒரே பேச்சாகக் கிடக்கிறது. படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தராமல் அந்த டாப் நடிகர் கொடுக்கும் குடைச்சலால் படப்பிடிப்பே பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னணி நடிகரான அவரும், அந்தப் புன்னகை அரசியும் இணைந்து நடித்த முதல் திரைப்படமே 'கிளாஸ் பஸ்டர்' ஹிட் அடித்தது. அப்போது இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு, அடுத்த படத்திலும் தொடர்ந்த போது காதலாக மாறியது. ரசிகர்கள் கொண்டாடும் ஜோடியாக மாறிய இவர்கள், மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ரகசியமாக டேட்டிங் சென்று வந்தனர். அந்த போட்டோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாகின. ஆனால், காதலை வெளியில் சொல்லாமல் ரகசியமாக மறைத்து வந்த இந்த ஜோடி, சமீபத்தில் தான் தங்களது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக நடத்தி முடித்து தற்போது கணவன்-மனைவியாக வலம் வருகின்றனர்.

புது குடைச்சல்: திருமணத்திற்குப் பிறகு இந்த நட்சத்திர தம்பதி முதன்முறையாக ஒரு பிரம்மாண்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அந்த டாப் நடிகர் தயாரிப்பு தரப்பிற்கு கடுமையான குடைச்சல் கொடுத்து வருகிறாராம். படப்பிடிப்பிற்குச் சரியாக ஒத்துழைப்பு தராமல், தனக்கு மட்டுமே பிரத்தியேகமாக 50 உதவியாளர்கள் மற்றும் 6 கேரவன்கள் வேண்டும் என தயாரிப்பு குழுவிடம் அந்த நடிகர் கேட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கம் வரை சென்ற பஞ்சாயத்து: நடிகரின் இந்த அடுக்கடுக்கான நிபந்தனைகளால் மிரண்டு போன அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம் கடுப்பாகி இந்த விஷயத்தை தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றது. தயாரிப்பு நிறவனம் அவரை அழைத்து பேச முற்பட்ட போதும், அந்த டாப் நடிகர் பேச்சுவார்த்தை கூட வராமல் போக்கு காட்டி உள்ளார். மேலும் தயாரிப்பு நிறுவனம் என்னிடம் பேசாமல் சங்கத்திற்கு இதை கொண்டு சென்றதால் ஆத்திரப்பட்ட டாப் நடிகர், படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் மேலும் அடவடியில் இறங்கி இருப்பதால், படப்பிடிப்பை நடத்த விடாமல் தயாரிப்பு நிறுவனம் தவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications