காமெடியன்கள் ஹீரோவாவதில் தப்பில்லை... ஆனால்!

By Shankar

சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். சம்பந்தப்பட்டவர்கள் யார் பெயரையும் குறிப்பிட முடியாது என்பதால், சும்மா கிசுகிசு மாதிரி படித்து, யாரா இருக்கும் என ஊகித்துக் கொள்ளுங்கள்.

அவர் ஒரு முன்னணி காமெடியன். அவரை ஹீரோவாக வைத்து ஒரு திரைக்கதையைத் தயார் செய்தார் இளம் இயக்குநர். டிஸ்கஷன்கள் ஜோராக நடந்தன. அதில் பங்கேற்ற நண்பர், ஒவ்வொரு காட்சியையும் நம்மிடம் விவரித்தபோது, அடக்கமுடியாத சிரிப்பு. எல்லோருக்கும் பிடித்த அந்த திரைக்கதை, காமெடியனுக்குப் பிடிக்கவில்லை.

ஏன்...

'என்னண்ணே... என்னை காமெடியனாவே காட்றீங்களே... நான் இந்தப் படத்துல ஹீரோவாச்சே!" என்று கூறி தட்டிக் கழித்துவிட்டாராம்!

அடுத்து நாம் சொல்ல வரும் விஷயத்துக்கு, இதை முன்னுரையாக வைத்துக் கொள்ளுங்களேன்!

சிரிப்பு நடிகர்கள் இப்போது வரிசையாக ஹீரோ வேஷம் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி இரண்டு படங்களும் வெளியாகியும்விட்டன.

ஆனால், இவர்கள் காமெடியன்களாக களமிறங்கியபோது கிடைத்த அபார வரவேற்பு, ஹீரோவாக வந்த போது கிடைத்ததா என்றால்... உதட்டைப் பிதுக்குகிறது பாக்ஸ் ஆபீஸ்... 'என்னமோ போங்க... அவருக்காகத்தான் போனோம், ஆனா சிரிப்பே வரல,' என்கிறார்கள் ரசிகர்கள்.

ஹீரோ என்றால் உர்ரென்று முகத்தை வைத்துக் கொள்ள வேண்டுமா? படம் முழுக்க காமெடி செய்தபடி வந்தாலும், அவர் ஹீரோதானே... இந்த அடிப்படை உண்மையை மறந்துவிட்டு, எனக்கும் ஹீரோயின்கள் வேணும், நானும் டூயட் பாடணும், நானும் சண்டை போடணும்... சாகஸங்கள் பண்ணனும் என்று வரிந்து கட்டிக் கொண்டு தன்னை வலிந்து திணிப்பதில்தான் காமெடியன்களின் ஹீரோ சறுக்கல் ஆரம்பமாகிறது.

வடிவேலுவின் தெனாலிராமனை எடுத்துக் கொள்வோம். ஒரு படமாகப் பார்த்தால் அது அப்படியொன்றும் மோசமில்லை. ஆனால் மூன்றாண்டுகள் கழித்து வரும் காமெடிப் புயல் வடிவேலு படமாச்சே.. மனுசன் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கப் போறார்.. என்று நினைத்துக் கொண்டு போனவர்களுக்கு... பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.

இப்போது வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். சந்தானம் நாயகனாக வந்துள்ள இந்தப் படமாவது, ரசிகர்களை கொல்லென்று சிரிக்க வைத்ததா என்றால்... ம்ஹூம். சிரிப்பு நடிகரின் சிரிப்பில்லாத படங்களில் ஒன்றாக வந்திருக்கிறது.

படம் முழுக்க நகைச்சுவை இருக்க வேண்டும்... அவ்வப்போது மானே தேனே பொன்மானே மாதிரி கொஞ்சம் சீரியஸ் காட்சிகளும் வேண்டும். ஆனால் நாயகன் காமெடியன்தான். சிரிப்பு நடிகர்களுக்கான திரைக்கதை இப்படி அமைய வேண்டும். அதில் அபார வெற்றி பெற்ற ஒரே ஒருவர் கே பாக்யராஜ். இம்சை அரசன் 23-ம் புலிகேசியையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம் (உக்கிரபுத்தன் வடிவேலுவைப் பொறுத்துக் கொள்ளலாம்).

இதை நாம் சொல்ல காரணம்... வடிவேலு, சந்தானம் படங்களில் உபதேசத்தையும் சாகசத்தையும் யாரும் எதிர்ப்பார்ப்பதில்லை. அதற்குத்தான் ஏகப்பட்ட ஹீரோக்கள் இருக்கிறார்கள். அவர்கள் விடும் சவுண்டுதான் அவ்வப்போது காதுகளைப் பதம் பார்க்கிறதே...

Santhanam

ஹீரோவாக வந்தாலும், ரசித்து ரசித்து சிரிக்கும்படியாக காட்சிகள் கொண்ட திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால், காமெடியன்கள் எவர்கிரீன் ஹீரோக்களாக முடியும்... ம்ம்... யாரு கேக்கப் போறா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X