அதெல்லாம் வர முடியாது... சரியான நேரத்தில் "நச்"சென்று அடித்த ஹீரோ!
சென்னை: நீண்ட இழுபறிக்குப் பின் வெளியான அந்த படத்தின் வெற்றி விழாவுக்கு சிவமான நடிகரை கூப்பிட்டால் அவர் கண்டுகொள்ளவே இல்லையாம். காரணம், அந்தப் படம் வருவதற்கு முன்பு படத்தின் தயாரிப்பாளர் செய்த அட்டூழியம்தானாம்.
தயாரிப்பாளரும் ஒரு இயக்குநர்தான். பெயரில் கூட சாமி உள்ளது. ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பு அவர் ஆடிய சாமியாட்டத்தை அந்த ஹீரோ தனது வாழ்க்கையில் மறக்க மாட்டாராம். அப்படி ஒரு பேயாட்டம் ஆடி விட்டாராம்.
குறுகிய வருடங்களிலேயே முன்னணி நடிகர்களுக்கு இணையாக மாறிய நடிகருக்கு முன்னனி நடிகரின் பெயரை முதல் பாதியாகவும், கடவுளின் பெயரை இரண்டாம் பாதியாகவும் கொண்ட அந்தப்படம் உண்மையில் சந்தோஷத்தைத் தரவில்லையாம். ஊரே கூடி உற்சாகத்துடன் படத்தையும், தன்னையும் ரசித்துக் கொண்டாடினாலும் கூட மனிதர் மனதுக்குள் பெரும் வருத்தத்தில்தான் இருக்கிறாராம்.
படத்தை வாங்கிய அந்த இயக்குநர் ஏற்கனவே வாங்கிய கடன்களால் படத்தின் வெளியீட்டை தள்ளி போட்டுக் கொண்டே வந்தார். இதனால் பொறுத்துப் பார்த்து பொறுமையிழந்த நடிகர் அவரிடம் அணுகி ஏதாவது செய்ங்கண்ணே என்று கேட்டபோது உன் சம்பளத்தைக் குறைச்சுக்கோ, அது முடியாட்டி என்னால படத்தை வெளியிட முடியாது என்று அடாவடியாகப் பேசினாராம் இயக்குநர் + தயாரிப்பாளர். அத்தோடு நில்லாமல் நடிகரிடமே பட ரிலீஸுக்குத் தேவையான காசையும் கேட்டாராம்.
மேலும் சில பல மிரட்டல்களையும் கூட அவரிடமிருந்து நடிகர் சந்திக்க நேர்ந்ததாம். இதனால் நடிகர் அதிர்ச்சி அடைந்தாலும் கூட படம் வெளியே வந்தால் போதும் என்ற ஒரே எண்ணத்தில் இதைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் தனது காசைப் போட்டு படம் வெளியே வர உதவினாராம். படமும் வந்தது வரலாறும் படைத்து விட்டது.
நடிகர் தன்னை நிரூபித்து விட்டார். ஆனால் இப்போது தயாரிப்பாளரான இயக்குநர்தான் கூனிக் குறுகி நிற்கிறாராம். தனது கஷ்டம் தீர்ந்து விட்டதால் கஷ்டத்தைத் தீர்த்த இந்தப் படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாடலாம் என்று எண்ணி ஹீரோவை அணுகியபோது அவர் வர முடியாது என்று கூறி விட்டாராம்.
இதுகுறித்து அவர் நடிகருக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பினாராம். அதை அவர்கள் வந்து நடிகரிடம் சொல்ல, கடன் வாங்கித்தானே அவர் கஷ்டப்பட்டு எடுத்தார். அந்த கஷ்டத்தை நாம தீர்த்தோம். ஆனால் நமக்கு என்ன லாபம்.. அவரிடம் மிரட்டலையும், திட்டையும்தானே பரிசாகப் பெற்றோம். இதுக்குப் பேசாம நாமளே கஷ்டப்பட்டு படம் எடுத்திரலாம் போலிருக்கே, திட்டும் மிரட்டலும் குறையுமே என்றாராம்.
அதாவது இனி்மேல் சொந்தப் படம் எடுக்கும் ஐடியாவுக்கு வந்து விட்டாராம் நடிகர்.. சபாஷ் சரியான முடிவுதான்!


Click it and Unblock the Notifications











