தமிழ் திரையுலகுக்கு சல்மான் 'அட்வைஸ்'!

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மற்றும் தென்னிந்தியத் திரையுலகின் ஒருமித்த கோரிக்கையை மதித்து சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட்டின் பெரும்பாலான பிரபலங்களும் இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவைப் புறக்கணித்தபோது சல்மான் கான், விவேக் ஓபராய் உள்ளிட்ட சிலர் மட்டும் எந்த ஆட்சேபனையை புறக்கணித்து விட்டு கலந்து கொண்டனர்.
சல்மான் கான் அத்தோடு நிற்கவில்லை. இலங்கை அரசின் பி.ஆர்.ஓ போல நடக்க ஆரம்பித்துள்ளார். இலங்கைக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார். தற்போது இலங்கைத் தமிழர்களையும் தனது செயலுக்கு ஆதரவாக கூப்பிட்டுப் பேசியுள்ளார். அத்தோடு தமிழ்த் திரையுலகினருக்கும் அட்வைஸ் கொடுப்பது போல பேசியுள்ளார்.
தற்போது ஆசினுடன் இலங்கையில் முகாமிட்டுள்ள சல்மான் கான், ரெடி என்ற இந்திப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இதனால் ஆசினுக்கு தமிழ்திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்தியத் திரையுலகமே ஒன்று சேர்ந்து ரெட் கார்டு போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சல்மான் கான் செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பையில் நான் இருந்தபோது இலங்கை செல்லவேண்டாம் என சில குறுந்தகவல்கள் வந்தன. ஆனால் இலங்கை தமிழர்கள் தமிழ் திரைப்பட நட்சத்திரங்களை காண ஆர்வமாக உள்ளதை நான் இப்போதுதான் அறிந்தேன். அவர்களை புறக்கணிக்கும் வகையில் ஏன் தடை விதித்துள்ளார்கள் என்று தான் புரியவில்லை.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, இயற்கை எழில் சூழ்ந்த நிலையிலும், படப்பிடிப்புக்கு ஏற்ற வகையிலும் உள்ளது. எனவே அதை புறக்கணிப்பது தேவையற்றது என்று கூறியுள்ளார் சல்மான்.


Click it and Unblock the Notifications











