நான் அரசியலுக்கு வந்தால்... அர்ஜுன்!

அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் "மாசி' படத்தின் தொடக்க விழா, சென்னையில் நடந்தது. இந்த படத்துக்கு முதலில், 'கள்ளன்' என்று பெயர் சூட்டினார்களாம். ஆனால் அது ஒரு குறிப்பிட்ட சாதி பெயரைக் குறிப்பிடுவது போல் உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்ததால், அந்த பெயர் மாற்றப்பட்டது.
கதைப்படி நாயகன் பெயர் 'மாசிலாமணி' என்பதால் அந்தப் பெயரின் முதல் இரு எழுத்துக்களை மாசி என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
தங்கம், தீ படங்களை இயக்கிய ஜி.கிச்சா இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் தொடக்க விழா பூஜையில் அர்ஜுன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
எல்லோரும் என் இளமைத் தோற்றம் பற்றிப் பேசுகிறார்கள். புதுசு புதுசாக சாதிக்கணும் என்ற ஆர்வமும், லட்சியமும்தான் இந்த இளமையை தக்க வைத்துக் கொள்ளக் காரணம். சினிமாவில் நடிகர்-நடிகைகளின் வாழ்க்கை கொஞ்ச காலம்தான். அந்த கொஞ்ச காலத்துக்குள் என்ன சாதிக்க முடியுமோ, அதை சாதித்துவிட வேண்டும்.
அந்த ஆர்வமும்கூட என் இளமையான தோற்றத்துக்கு காரணம் எனலாம். நான், ஒரு நாளில் மூன்று முறை உடற்பயிற்சி செய்கிறேன். 40 சதவீதம் உடற்பயிற்சி என்றால், 60 சதவீதம் உணவில் கட்டுப்பாடாகவும் இருக்கிறேன்.
பேலீஸ் அதிகாரி வேடங்கள் எனக்கு பழகிய ஒன்றுதான். ஏற்கனவே ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். அந்த படங்களில் இருந்து மாறுபட்ட போலீஸ் அதிகாரியாக 'மாசி'யில் நடிக்கிறேன். இப்படியும் ஒரு போலீஸ் அதிகாரி இருப்பாரா? என்று ஆச்சரியப்படுத்தும் கேரக்டர் இது.
அரசியல்..
முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராக நடித்தேன். ஆனால் அதை நிஜத்தில் நடத்திப் பார்க்க முடியுமா...
எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்குப் போய் ஜெயித்தார்கள். இப்போது விஜயகாந்தும் வந்திருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை, எந்த பக்கம் பந்து போகிறதோ, அந்த பக்கம் நாமும் போகணும். முயற்சி செய்து பார்க்கக் கூடாது. அரசியலை பற்றி ஆய்வு செய்கிற தகுதி எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை.
ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால், 100 சதவீதம் உண்மையாக உழைப்பேன்.
தமிழ் சினிமா தரம்!
ஸ்லம்டாக் மில்லினர் மூலம் ஏ.ஆர்.ரகுமான் 2 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது, தமிழ் சினிமா ஆரோக்கியமாகத்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி.
ஆனால் தமிழ் சினிமா ஹாலிவுட்டுக்கு இணையாக முன்னேறிக் கொண்டிருந்தாலும், அங்கிருப்பதைப் போன்ற பொருளாதார வசதிகள் நமக்கில்லை. முழுக்க முழுக்க ஹாலிவுட் தரத்துக்கு போக முடியாததற்கு பணம் ஒரு தடையாக உள்ளது.
ஹாலிவுட் தரத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில், ஒரு படத்துக்கு ஐந்து அல்லது ஆறு பாடல்கள் கட்டாயம் என்ற திணிப்பு அவசியம்தானா? என்ற உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது. ஆனால் அப்படிப் படம் எடுக்கும் தைரியம் எத்தனைப் பேருக்கு வரும்!.
குருதிப்புனல் படத்தில் கமல்ஹாசன் பிடிவாதமாக பாட்டு அவசியமில்லை என்று கூறிவிட்டார். அது மாதிரி துணிச்சல் உள்ளவர்கள் இங்கே வேறு யார்? நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் வருபவர்களை, எல்லாவிதத்திலும் திருப்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். பாட்டு இல்லையென்றால், படம் சரியில்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.
ஒரு கணவன்-மனைவி கதையை வித்தியாசமாக சொல்லலாம் என்று 'வேதம்' படத்தை எடுத்தேன். வெறும் பாராட்டுக்கள்தான் மிஞ்சியது. எனக்கு பெரிய நஷ்டம். ஆனால் அது என் சொந்த படம் என்பதால், அந்த நஷ்டத்தை தாங்கிக் கொண்டேன். நல்ல படம் எடுத்தால் நஷ்டப்பட வேண்டி வரும் என்ற நிலை மாற வேண்டும் என்றார் அர்ஜுன்.


Click it and Unblock the Notifications











