'சூப்பர் ஸ்டார்' போய் 'சுப்ரீம் ஸ்டார்'!

பாபா படத்திற்குப் பிறகு ரஜினியும், கே.எஸ்.ரவிக்குமாரும் இணையும் படமாக அறிவிக்கப்பட்டதுதான் ஜக்கு பாய். நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று இறைவா என்ற வித்தியாசமான பன்ச் லைனுடன் விளம்பரப்படுத்தப்பட்ட படம் ஜக்குபாய்.
ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஜக்குபாய். ஆனால் திடீரென அந்தப் படத்தை அப்படியே விட்டு விட்டு சந்திரமுகிக்குப் போய் விட்டார் சூப்பர் ஸ்டார்.
ரஜினி ஜக்கு பாயைக் கைவிட பல காரணங்கள் கூறப்பட்டன. இப்படத்தின் போட்டோ செஷனைக் கூட முடித்து விட்ட நிலையில் ரஜினி படத்திலிருந்து விலக முக்கியக் காரணம், படத்தின் கதைதான். அரசியல்வாதிகள் தொடர்புடைய கதை என்பதால் பாபாவின் பின்னணியில் மீண்டும் அரசியல் கதை வேண்டாமே என்று ரஜினி எண்ணியதுதான் ஜக்குபாய் கைவிடப்பட முக்கிய காரணம்.
மேலும், சில இஸ்லாமிய அமைப்புகளும் படத்தின் தலைப்புக்கு ஆட்சேபனை தெரிவித்தனர். இப்படி ஆரம்பத்திலேயே சலசலப்புகள் எழுந்ததால்தான் ஜக்குபாய்க்கு டாடா காட்டி விட்டார் ரஜினி.
இதனால் அப்செட் ஆன ரவிக்குமார், அஜீத்தை வைத்து காட்பாதர் படத்தை இயக்கினார். அதன் பின்னரும் கூட ரஜினியிடமிருந்து அழைப்பு வராததால், கமல்ஹாசனை வைத்து தசாவதாரம் படத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக முடித்தும் விட்டார்.
இந் நிலையில் மீண்டும் ஜக்கு பாய்க்கு உயிர் கிடைத்துள்ளது. ஆனால் நாயகன் சூப்பர் ஸ்டார் அல்ல, மாறாக சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.
ரவிக்குமாரும், சரத்குமாரும் இணைந்து கொடுத்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனவை. இந்த முறை பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இருவரும் கை கோர்க்கிறார்கள். படத்தைத் தயாரிக்கப் போவது ராதிகாவின் ரேடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம்.
ஜக்குபாய் கதை, தனக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என கருதுகிறார் சரத்குமார். தற்போது அரசியல் தலைவராகவும் மாறியுள்ளதால், அரசியல் வாதிகளை சாடும் கதையான ஜக்குபாயில் நடித்தால் அது தனது அரசியல் வாழ்க்கைக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்பதும் சரத்குமாரின் எண்ணம்.
இதனால்தான் அக்கதையில் நடிக்க விருப்பம் தெரிவித்தாராம் சரத்குமார். அதற்கு ரவிக்குமாரும் சம்மதிக்கவே இருவரும் இணையப் போகிறார்கள்.
ஜக்குபாய் என்ற தலைப்பை தேர்வு செய்ததே ரஜினிதான். இப்போது அது சுப்ரீம் ஸ்டாருக்கு ஏற்றம் தரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











