நேதாஜியை அவமதிப்பதா? - அமிதாப் மீது வழக்கு!

இந்தியில் பிரபலமான 'கோன் பனேகா குரோர்பதி' தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 4-ம் பாகத்தை நடிகர் அமிதாப்பச்சன் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் இடையே வரும் விளம்பரங்களில் ஒரு விளம்பரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சுதந்திர போராட்டத்தின்போது, "நீங்கள் எனக்கு ரத்தம் தாருங்கள். நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்'' என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எழுப்பிய வாசகத்தை இழிவு படுத்தும் வகையில் அந்த விளம்பரம் உள்ளது என்றும், அதை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி, நடிகர் அமிதாப்பச்சன், மத்திய தணிக்கை வாரியம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி முகேஷ் சர்மா என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மொகித் ஷா, ஜி.எஸ்.காட்போலே ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல், அந்த விளம்பரம் நகைச்சுவையானது மட்டுமே. யாரையும் இழிவு படுத்துவது அல்ல என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 28-ந் தேதிக்கு தள்ளி வைத்தும், அதற்குள் அமிதாப்பச்சன் மற்றும் தனியார் தொலைக்காட்சி இதுகுறித்து பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications











