மலையாள சினிமா கலைஞர்கள் சங்கத்திலிருந்து நிரந்தமாக நீக்கப்பட்டார் திலகன்!

மலையாளத் திரையுலகில் மூத்த நடிகர் திலகன். தமிழ் ரசிகர்களுக்கும் இவர் சத்ரியன், மேட்டுக்குடி போன்ற பல்வேறு படங்களின் மூலம் அறிமுகமானவர்.
சிறந்த நடிகர் என பெயர் பெற்ற இவர், தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைக் குவித்தவர்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களின் ஆதிக்கம் பற்றியும் அதன் பாதகமான விளைவுகள் குறித்தும் திலகன் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளில் புகார் கூறிவந்தார்.
இதன் விளைவாக சமீபத்தில் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க திலகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் மலையாள சினிமா நடிகர்கள் சங்கத்தை கடுமையாக விமர்சித்து அறிக்கை விடுத்தார். மம்முட்டி - மோகன்லால் இருவரும் மலையாள சினிமாவில் யாரையும் தலையெடுக்க விடாமல் செய்து வருவதாகக் கூறினார்.
எனவே மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான 'அம்மா' (AMMA) இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானித்தது.
கடந்த மார்ச் 1ம் தேதி சங்கத்தில் இதுபற்றி தீர்மானம் கொண்டுவரப்பட்டு, திலகனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்போதே திலகனை தற்காலிமாக சங்கத்தில் இருந்து நீக்கி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், நேற்று கொச்சியில் சங்கத்தின் செயற்குழு கூடி, திலகனை நிரந்தரமாகவே சங்கத்தில் இருந்து நீக்குவதாக முடிவு செய்தது.
இதுபற்றி, அமைப்பின் தலைவர் இன்னோசன்ட் மற்றும் பொதுச் செயலாளர் மோகன்லால் ஆகியோர் நிருபர்களிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அவர்கள் கூறுகையில், 'திலகன் அளித்த விளக்கம் சங்கத்துக்கு திருப்திகரமானதாக இல்லை. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்த்தில் இருந்து திலகனை நிரந்தரமாக நீக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது' என்றனர்.


Click it and Unblock the Notifications











