கமல்ஹாசனின் 56வது பிறந்த நாள்-ரசிகர்கள் உறுப்பு தானம்
உலக நாயகன் கமல்ஹாசனின் 56வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் இன்று பல்வேறு தொண்டுகள் மூலம் கொண்டாடினர்.
கமல்ஹாசனுக்கு இன்று 56வது பிறந்த நாளாகும். வழக்கம் போல அவரது பிறந்த நாளை, கமல்ஹாசன் ரசிகர்கள், பல்வேறு சமூக சேவைகள், தொண்டுப் பணிகள், ரத்ததானம் போன்ற தானங்களுடன் கொண்டாடினர். கூடுதலாக இந்த ஆண்டு உறுப்புதானமும் செய்தனர்.
சென்னை குரோம்பேட்டையில் நடந்த நிகழச்சியில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கமல் ரசிகர்மன்ற பொறுப்பாளர் பி.கே.மணிவண்ணன் தலைமையில் 200 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்வது தொடர்பான உறுதிமொழிப் பத்திரங்களை அளித்தனர். அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மோகன் பவுண்டேஷன் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
பின்னர் இலவச மருத்துவ முகாம் ஏழைகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. விதவைகள் மற்றும் முதியோர் 50 பேருக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன.
இன்று சென்னையில் கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் கமல். அப்போது தனது ரசிகர்களை தொடர்ந்து இதுபோல சமூக சேவைகளிலும், நற்பணிகளிலும், ஏழைகளுக்கு உதவுவதிலும் அதிக அளவில் ஈடுபடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
பேராசிரியர் ஞானசம்பந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். 12ம் வகுப்பு மாணவருக்கு இலவச லேப்டாப், 56 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள், 15 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், மாணவர்களுக்கு ரூ. 20,000 மாணவர்களுக்கு மருந்துகள், திருவண்ணாமலையைச் சேர்ந்த எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளைப் பராமரிக்கும் ஒரு நிறுவனத்திற்கு 50 தரைவிரிப்புகள், கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 25,000 மதிப்புள்ள புத்தகங்கள், முதியோர் இல்லத்திற்கு 100 தலையணைகள், பாய்கள், 3 விதவைப் பெண்களுக்கு தலா ரூ. 10,000 பண உதவி, 2 உடல் ஊனமுற்றோருக்கு ரூ. 3000 நிதியுதவி உள்ளிட்ட உதவிகளை கமல்ஹாசன் வழங்கினார்.
கருணாநிதி வாழ்த்து
கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள், திரையுலகினர் அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி விடுத்திருந்த வாழ்த்துச் செய்தியில்,
உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். சிறு வயது முதல் இன்று வரை தமிழ்த் திரையுலகில் நீங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகிறீர்கள். இப்போது மதிப்பிட முடியாத உயரத்தை அடைந்துள்ளீர்கள். புகழின் உச்சாணியில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார் முதல்வர்.


Click it and Unblock the Notifications