ரஜினியிடம் கோரிக்கை வைத்த கமல்!

தசாவதாரம் படத்துக்காக 2008-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற கமல்ஹாசன் தனது ஏற்புரையாக பேசியதாவது:
"இந்த ஏற்புரையை நான் சொல்வேன் என எதிர்பார்க்கவில்லை. எதுவும் தெரியாமல் இங்கு வந்தேன். நான் பிறப்பதற்கு முன்னால் எழுதிய வசனங்களை இங்கு சொல்லலாம் என்று வந்தேன். கலைஞர் எழுதிய வசனங்களை நடிகர் திலகம் சிவாஜியிடம் நான் பேசிக் காட்டி இருக்கிறேன். ஒருமுறை கூட கலைஞர் முன்பு பேசிக் காட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இன்று இங்கே வடிவேல் படித்த வாழ்த்து பாடலில், கலைஞர் நடந்து சென்ற பாதையில் ஏற்படும் புழுதியில் புரள்வேன் என்று ஒரு வரி இருந்தது. கலைஞர் நடந்து சென்று கிளப்பிய புழுதியில் நனைந்தவர்கள், நாங்கள். ஒரு தலைமுறையை தாண்டி கூட, இன்னும் அந்த புழுதியில் குளித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த விழா சரித்திரத்தில் இடம்பெறும். எங்கள் கையினால் உங்களுக்கு விருது வழங்கியதை எங்கள் பேரக் குழந்தைகளிடம் கூட பெருமையோடு சொல்லிக் கொள்வோம். அதற்காக உங்களுக்கு நன்றி சொல்வதா, வாழ்த்துவதா என்று புரியவில்லை.
எனக்கு ரஜினிக்கும் இடையே பொறாமை இல்லை:
எனக்கும், ரஜினிக்கும் இடையே பொறாமை இல்லை. நாங்கள் பொறாமைப்பட்டது, குஷ்பு தமிழில் பேசியதை பார்த்துதான். கலைஞர் என் பக்கம் திரும்பி, குஷ்பு தமிழில் பேசுவதை பார்த்தாயா? என்று கேட்டார். அந்த அளவுக்கு குஷ்பு தமிழில் பேசி, தனி விருதை தட்டிக்கொண்டு போய்விட்டார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
கலைஞர் உடல் நலக்குறைவு காரணமாக விழாவுக்கு தாமதமாக வருவதாகக் கூறினார். அவர் எங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அப்படி சொன்னது, அவருடைய பண்பு. அந்த பண்பை கண்டு நாங்கள் வியந்தோம். இன்னும் அவரிடம் பாடம் படித்துக் கொண்டிருக்கிறோம். இந்த விழாவை வேகமாக நடத்தி முடிக்க வேண்டியது எங்கள் கடமை.
விழாவில் கலந்துகொண்டு விருது வழங்கியதை அவர் கடமை என்று நினைத்து செய்யவில்லை. உரிமை என்று நினைத்து செய்தார். இது, சரித்திரத்தில் இடம்பெறும். இந்த விழாவில் நானும் பங்கு பெற நேர்ந்ததற்காக நன்றி.
ரஜினிக்கு என் வாழ்த்துக்கள். அவர் (எந்திரன்) படத்தை சீக்கிரமே முடித்து வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்..." என்றார் கமல்.


Click it and Unblock the Notifications











