படத்தை வெளியிட தேதிக்காக சண்டையிடும் அஜய் தேவ்கன், ஷாஹீத்
மும்பை: படத்தை வெளியிடும் தேதிக்காக அஜய் தேவ்கனும், ஷாஹீத் கபூரும் சண்டை போடுகின்றனர்.
பாலிவுட்டில் பெரிய நடிகர்கள், நடிகைகள் ஒருவருக்கொருவர் ஒத்துபோவதே இல்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் சண்டை. சேச்சே சின்னப் புள்ளத் தனமா இருக்கே என்று நினைத்தால், அஜய் தேவ்கனும், ஷாஹீத் கபூரும் கூட இப்போது சண்டையில் குதித்துள்ளனராம்-ஆனால் இன்னும் சட்டையெல்லாம் கிழியவில்லையாம்.
நம் சூரியாவின் சிங்கம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அதில் சிங்கமாய் வருவது அஜய் தேவ்கன். இந்த படத்தை கோல்மால் புகழ் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார். சிங்கம் படத்தை வரும் ஜூலை மாதம் 22-ம் தேதி வெளியிட அஜய் திட்டமிட்டுள்ளார்.
அதே தேதியில் தனது மௌசம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் ஷாஹீத் கபூர். அஜய் தேவ்கனிடம் தேதியை மாற்றிக் கொள்ளுமாறு ஷாஹீத் கேட்டுக் கொண்டாராம். ஆனால் படத்தின் இயக்குனர் ரோஹித் மாறுவதாக இல்லை.
ரோஹித் ஷாஹீத் கபூருக்கு முன்பே சிங்கம் வெளியீட்டு தேதியை அறிவித்தார். இந்த பிரச்சனையைத் தீர்க்க ஷாஹீத் தந்தை பங்கஜ் கபூர் ரோஹித்தை சந்தித்து பேசவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











