ஜெயம் ரவியின் மனித நேயம்!

இம்முறை தனது பிறந்த நாளை அவர் சென்னை அண்ணாசாலையில் உள்ள சிறுமலர் காது கேளாத- வாய்பேச முடியாதோர் பள்ளியின் மாணவ மாணவிகள் மத்தியில் கொண்டாடினார்.
முற்பகல் 11.30 மணிக்கு பள்ளி வளாகத்துக்குள் வந்த ஜெயம் ரவியை அப்பள்ளியின் மாணவிகள், நிர்வாகிகள் பூங்கொத்து அளித்து அன்புடன் வரவேற்றனர்.
பின்னர் 12 மணிக்கு கேக் வெட்டிய ரவிக்கு, மாணவ மாணவிகள் கோரஸாக பாட்டுப் பாடி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பின்னர் ஒவ்வொரு சிறுமியராக வந்து பூங்கொத்துக்களை அளித்து வாழ்த்தினர். அவர்களில் ஒரு சிறுமி ஜெயம் ரவியிடம், 'உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?' என்று கேட்டார்.
'நல்ல நடிகனாக வரவேண்டும் என்பதே என் லட்சியம்!' என அவர்களுக்குப் புரியும் விதத்தில் சைகையால் பதில் சொன்னார் ரவி. இன்னும் சில மாணவிகள் ஜெயம் ரவி நடித்த அனைத்து படங்களின் பெயர்களையும் சொல்லிக் காட்டினர்.
பின்னர் அனைவருக்கும் பிறந்த நாள் கேக்குகள், இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கினார் ஜெயம் ரவி.
இந்த பிறந்த நாள் அனுபவம் குறித்துப் பேசுகையில், 'உண்மையிலேயே இந்த நாளை என் வாழ்க்கையில் மறக்கமாட்டேன். இந்தக் குழந்தைகளின் வாழ்த்து கடவுளே ஆசீர்வசித்தது போல இருந்தது. இந்த நாளை மிகவும் அர்த்தமுள்ளதகாகக் கொண்டாடிய மகிழ்ச்சியுடன் இங்கிருந்து செல்கிறேன்', என்றார்.
இந்த நிகழ்ச்சியின் போது, ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன், தாயார் வரலட்சுமி, அண்ணன் இயக்குநர் ராஜா, ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
ஜெயம் ரவியின் பிஆர்ஓ ஜான் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.


Click it and Unblock the Notifications











