தலைவன் படுத்தா தொண்டன் காணாம போயிருவான்- ரஜினி

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு கலை உலக சாதனையாளர் விருது வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசியது:
தொழிலாளிகள் இல்லாமல் முதலாளிகள் இல்லை. முதலாளிகள் இல்லாமல் தொழிலாளிகள் இல்லை. முதலாளிகளுக்கு பல இனம் இருக்கிறது. தொழிலாளிகளுக்கு ஒரே இனம் தான், அது உழைக்கும் வர்க்கம்.
முதலாளிகள் பல விதம்!
கிடைக்கிற லாபத்தில் 100 சதவீதத்தையும் எடுத்துக்கிற முதலாளி கொள்ளைக்கார முதலாளி. 75 சதவீதத்தை எடுத்துக்கிட்டு 25 சதவீதத்தை தொழிலாளிகளுக்கு கொடுக்கிறவன் திருட்டு முதலாளி. 50 சதவீதத்தை எடுத்துக்கிட்டு 50 சதவீதத்தை கொடுக்கிறவன் வியாபாரி முதலாளி.
25 சதவீதத்தை எடுத்துக்கிட்டு 75 சதவீதத்தை தொழிலாளிகளுக்கு கொடுக்கிறவன் மகா முதலாளி. 100 சதவீதமும் கொடுக்கிறவன் ஆண்டவன் மட்டும்தான்.
நீங்க மகா முதலாளியும் ஆக வேண்டாம். கொள்ளைக்கார முதலாளியும் ஆக வேண்டாம். திருட்டு முதலாளியும் ஆக வேண்டாம். 50 சதவீதம் தொழிலாளிகளுக்கு கொடுங்க. நானும் தொழிலாளியாக வந்து முதல்வரிடம் இடம் கேட்கிறேன்.
ஜெயலலிதா கொடுத்த இடம் டைமண்ட்:
ஜெயலலிதா ஒருமுறை இந்த இடத்தை உங்களுக்கு கொடுத்தாங்க. ஆனா நீங்க அதை கைவிட்டு விட்டு விட்டீர்கள். அது இப்போது டைமண்ட். இப்போது இடத்தை தள்ளி கொடுத்தா கூட அதை நீங்க வேண்டாம் என்று சொல்லாதீர்கள்.
இங்கு கலைஞருக்கு பாராட்டு விழா. அவருக்கு விருது கொடுத்து இருக்காங்க. அவருக்கு என்ன விருது கொடுத்திருக்காங்க. கலை சேவைக்காக இங்கே எல்லோரும் அவர பாராட்டியிருக்காங்க.
மாற்றான் வீட்டு தோட்டத்து மல்லிகை பூவிற்கும் மணம் உண்டு என்று சொன்ன தலைவர், அந்த தலைவன் போட்ட தோட்டத்துக்கு ஒரு காவலாளியாக இருந்து, வேலியாக இருந்து தோட்டக்காரனா இருந்து எத்தனையோ சோதனைகள், எத்தனையோ வலிகள், எத்தனையோ துன்பங்களை தாண்டி அந்த தோட்டத்தை நல்ல வனமாக்கி பெரிய பெரிய அரசியல் கட்சிகளே வந்து இந்த தோட்டத்தில் வந்து அமர செய்தவரை நான் எப்படி பாராட்ட. அந்த அண்ணா விட்டு போன கழகத்தை எப்படி வளர்த்து இருக்கீங்க!
பராசக்தி பற்றி பேசுறாங்க... பேசுறாங்க என்று எல்லோரும் சொல்றாங்க. கம்பர் ராமாயணத்தை பற்றி தான் சொல்ல முடியும். வள்ளுவர் குறளை பற்றி தான் சொல்ல முடியும். கலைஞர்ன்னா பராசக்தி பற்றி தான் பேசுவோம். சமுதாயத்தில் புரட்சி உண்டாக்கிய படம் பராசக்தி.
எழுதுகோலை செங்கோலாக்கியவர்...
மனோகரா படத்தில் கண்ணம்மா பேசும் வசனத்தை மக்கள் அப்படியே பார்த்துக்கிட்டு இருந்தாங்க. எழுத்தின் வலிமை அங்கே தெரிந்தது. எழுதுகோலை செங்கோலாக்கியவர் நீங்கள். அது உங்கள் இடது பக்கத்திலே இருக்கிறது. நீங்கள் மிகப்பெரிய சாணக்கியர். நான் கூட லேட்டாதான் தெரிஞ்சிக்கிட்டேன்.
ஒரு தலைவன் பறந்து போனால் தொண்டன் ஓடி வருவான். தலைவன் ஓடி வந்தால் தொண்டன் நடப்பான். தலைவன் நடந்தால் தொண்டன் உட்காருவான். தலைவன் உட்கார்ந்தால் தொண்டன் தூங்கிருவான். தலைவன் படுத்தால் தொண்டன் காணாமலே போயிடுவான்.
ஆனால் நீங்க தொண்டனுக்காக, மக்களுக்காக ஓடுறீங்க. ஓடிக்கிட்டே இருக்கீங்க. உங்க பின்னாடி தொண்டர்களும் வந்துகிட்டே இருக்காங்க. அப்படி ஓடும் போது உங்களுக்கு ஓய்வு கொடுக்கிறது இந்த பேனா, இந்த எழுதுகோல். அதற்காக நான் சந்தோஷப்படுகிறேன் என்றார் ரஜினி.


Click it and Unblock the Notifications











