மருத்துவர்கள் அனுமதியுடன் கோயிலுக்குச் சென்று வந்த ரஜினி!

பின்னர் பாம்பன் சுவாமிகள் ஆசிரமத்தில் வழிபட்ட பிறகு மீண்டும் மருத்துவமனை திரும்பினார்.
ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் 29ந் தேதி மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஒவ்வாமை மற்றும் அஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சிகிச்சைக்குப் பின் குணமடைந்து அன்று மாலையே வீடு திரும்பினார். டாக்டர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். ஆனால் தொடர்ந்து பார்வையாளர்கள் வந்தவண்ணம் இருந்ததால் அவரால் ஓய்வெடுக்க முடியவில்லை என்றும், நோய்த் தொற்று ஏற்பட்டதால் வைரஸ் காய்ச்சல் மற்றும் நெஞ்சில் சளி கட்டி மூச்சுவிட சிரமப்படுவதாகவும் கூறப்பட்டது.
எனவே கடந்த 4ந் தேதி மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர பிரிவில் வைத்து ரஜினிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் கிஷோர் ஆகியோர் ரஜினிக்கு சிகிச்சை அளித்னர்.
காய்ச்சலும், இருமலும் இருப்பதாக கூறப்பட்டது. மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றனர். இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் மருத்துவர்களிடம் அனுமதி பெற்று கோயில்களுக்குச் சென்றுவந்தார்.
காளிகாம்பாள் கோயில் - பாம்பன் மடத்தில் வழிபட்டார்
பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார் ரஜினி. பின்னர் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஆசிரமத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்ற ரஜினிகாந்த் அங்கு சாமி கும்பிட்டார். பின்னர் மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்பினார்.
இதனை இசபெல்லா மருத்துவமனை அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பாகவும் வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பிரார்த்தனை...
இதற்கிடையே ரஜினியின் தீவிர ரசிகர்கள் இந்தியா முழுவதும் அவர் நலம் பெற வேண்டி பிரார்த்தனைகள், யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகின்றனர். மும்பை மற்றும் டெல்லி ரசிகர்கள் கடந்த இரு தினங்களாக சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள ரஜினி ரசிகர்கள் அங்குள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். தங்கள் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளை இசபெல்லா மருத்துவமனைக்கே நேரடியாக தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











