மலையாள நடிகர்களுக்கு 25% சம்பள குறைப்பு- தயாரிப்பாளர்கள் அதிரடி

மலையாளத்தில் சமீப காலமாக பெரிய நடிகர்கள் நடித்து, மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்கள் கூட தோல்வி அடைகின்றன. இதனால் தயாரிப்பாளர்கள் பலர் காணாமல் போய்விட்டனர்.
கடந்த சில வருடங்களில் மட்டும் மலையாள பட உலகுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு, ரூ.150 கோடி. மலையாளப் படங்களின் வர்த்தகம் சிறிய எல்லையைக் கொண்டது. எனவே அங்கு இந்தத் தொகை மிகப் பெரியது, தாங்க முடியாததும் கூட. இங்கே கமல்ஹாஸன் ரூ 23 கோடி சம்பளம் பெறுகிறார். ஆனால் மம்முட்டிக்கு அதிகபட்ச சம்பளமே ரூ 1.30 கோடிதான். இருந்தும் இந்த நஷ்டம் தாங்க முடியாதது என புலம்புகின்றனர் தயாரிப்பாளர்கள்.
படஅதிபர்கள் நஷ்டத்தை தவிர்ப்பது எப்படி? என்பது பற்றிய ஆலோசனை கூட்டம், நேற்று கொச்சியில் நடந்தது. அதில் மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும், 'அம்மா' என்ற நடிகர் சங்க அமைப்பை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டார்கள். இரு தரப்பினரும் விவாதித்து, சில தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
அதன்படி, ரூ.3 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்-நடிகைகளுக்கு, சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைப்பது என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இனிமேல் பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிப்பவர்கள், ரூ.3.5 கோடிக்குள் படத்தை தயாரித்து முடித்துவிட வேண்டும். எந்த காரணம் கொண்டும் அந்த படங்களின் பட்ஜெட் ரூ.3.5 கோடியை தாண்டக்கூடாது என்று இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டிவியில் தோன்றக் கூடாது!
கூட்டம் முடிந்தபின், மலையாள நடிகர் சங்கம் தலைவர் இன்னசென்ட் கூறுகையில், "இனிமேல் மலையாள நடிகர்-நடிகைகள், டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். இதுபற்றிய விவரமான அறிக்கை, 45 நாட்களில் வெளியிடப்படும்'' என்றார்.
மலையாள பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சாபு செரியன் கூறும்போது, "இப்போதெல்லாம் பட தயாரிப்பு செலவில் 60 சதவீதம் நடிகர்-நடிகைகளின் சம்பளத்துக்கு போய்விடுகிறது. மீதி 40 சதவீத பட்ஜெட்டில்தான் படத்தை தயாரிக்க வேண்டியிருக்கிறது. இப்போது எடுக்கப்பட்டுள்ள சம்பள குறைப்பு நடவடிக்கை, தயாரிப்பாளர்களுக்கு பெரிய நிம்மதியை கொடுத்துள்ளது'' என்றார்.
ஆனால் முன்னணி நடிகர்களுக்கு இந்த முடிவு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











