பிறந்த நாள் ரத்து: ஹைதராபாத்தில் ரஜினி!

இந்த முறை அதையும், ஈழத் தமிழர்களுக்காக கொண்டாட வேண்டாம் எனத் தடுத்து நிறுத்திவிட்ட ரஜினி, தனது பிறந்த தினமான நாளை (டிசம்பர் 12) ஹைதராபாத்தில் சுல்தான்-தி வாரியர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ரஜினி வெளியூர் சென்று விடுவது வழக்கம். இந்த வருடம் பிறந்த நாளை சென்னையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் பெரிதும் விரும்பினர். இதற்காக மிகப் பெரிய அளவில் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
ஆனால், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படாததால், இந்த வருடம் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரஜினிகாந்த் தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், எந்திரன் ஷூட்டிங்கின் மூன்றாம் கட்டப் படப் பிடிப்பை முடித்துக் கொடுத்து விட்ட அவர், நேற்று அவர் விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். அங்கு ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெறும் 'சுல்தான் தி வாரியர்' படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்கிறார். இந்த படத்தை அவருடைய மகள் செளந்தர்யா இயக்குகிறார்.
வரும் 15-ந் தேதி வரை இந்த படப்பிடிப்பில் பங்கேற்கும் ரஜினி, ஹைதராபாத்தில் தங்கியிருக்கிறார்.
ரத்ததான முகாம்:
ஆனாலும் ரசிகர்கள் இந்த ஆண்டு ரஜினி பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
'ரஜினி இ பேன்ஸ் அசோசியேஷன்' நடத்திவரும் ரஜினிபேன்ஸ்.காம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14ம் தேதி) ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பரங்கிமலை மவுண்ட் மெடிக்கல் சென்டரில் நடக்கும் இந்த முகாமை ரஜினி இ பேன்ஸ் அசேஸியேஷன் நிர்வாகிகள் ரஜினி ராம்கி, ஷாஜகான் மற்றும் அண்ணாமலை நடராஜன் ஏற்பாடு செய்துள்ளனர்.
கண் சிகிச்சை முகாம்:
அதே போல நெல்லை ரஜினி ரசிகர்கள் ரத்த தான இயக்கம் சார்பில், ரஜினி பிறந்த தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாமை நடத்தினர். இந்த முகாமில் நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கான செலவை ரசிகர்கள் ஏற்றுள்ளனர்.
திருச்சி மற்றும் சேலத்திலும் இத்தகைய முகாம்களை நாளை நடக்கவிருப்பதாக அந்தப் பகுதி ரஜினி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











