கருணாநிதி மார்க் போடும் வாத்தியார்- கமல்

இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
என்னுடைய உலகத்தில், நான் அறிந்து கொண்ட உலகில் எனக்கு தெரிந்த முதல் கலைஞன் நீங்கள் தான். இவை மேடைக்காக சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல. இங்கே தயாரிப்பாளர் சரவணன் இருக்கிறார். அவர் என்னிடம் வசனம் பேச வருமா? என்று கேட்டபோது நான் பேசி காண்பித்த வசனம் உங்கள் வசனம். அப்போது உங்களுடைய வசனம் என்று கூட தெரியாத வயது எனக்கு. சொல்லி கொடுத்தார்கள். திருப்பி சொன்னேன்.
உங்களால் பதவி கிடைத்தது எனக்கு. அதற்கு பிறகு சிவாஜி கணேசனிடம் அழைத்து சென்று இந்த குட்டிப் பையன் கலைஞர் வசனத்தை பேசுகிறான் என்றார். உடனே அவர் என்னிடம் எவ்வளவு சொல்வாய் என்றார். நான் அவரிடம் முழுவதுமாக சொல்கிறேன் என்றேன். உடனே அவர் 'யப்பா எனக்கே கஷ்டம்ப்பா... நீ எப்படி சொல்ல போற?' என்றார். சொல்லிக் காட்டுகிறேன் என்றேன். உடனே அவர் சொல்லிக் காட்டு என்றார்.
மார்க் போடும் வாத்தியார்...
நான் சொல்லிக்காட்டிய போது என்னை மடியில் வைத்துக்கொண்டார். அவரது மடியில் ஏறி அமர காரணமாக இருந்தது உங்களின் வசனங்கள். பிற்பாடு தான் தெரிந்துகொண்டேன் அவர் உயருவதற்கும் காரணமாக இருந்ததும் உங்களின் வசனம் என்று.
இப்படி என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் வந்து இருக்கிறீர்கள். இது எங்களுக்கும் தெரியும். இதை சொல்லி எனக்கு பெருமை தேடிக்கொள்கிறேன். ஒரு நாள் என்னை வீட்டுக்கு அழைக்கிறீர்கள். நீ பத்மஸ்ரீ என்றீர்கள். சரி ஐயா என்றேன். பிறகு மீண்டும் அழைக்கிறீர்கள். நீ கலைஞானி என்கிறீர்கள். இப்படி படிப்படியாக எனக்கு என் உழைப்புக்கு மார்க் போடும் வாத்தியாராக இருந்து இருக்கிறீர்கள்.
எனக்குப் பட்டமே நீங்கள்தான்...
ஒவ்வொரு கட்டத்திலும் என் வாழ்க்கையில் ஒவ்வொரு புகழ் சேரும் போது உங்களிடம் மண்டியிட்டு என் பெருமைகளை சொல்லியிருக்கிறேன். நீங்களும் அதை கேட்டு ஆனந்தப்பட்டு இருக்கிறீர்கள். எனக்கு பட்டமே நீங்கள் தான்.
இது போன்ற பாராட்டு விழாக்களில் உங்களுக்கு பாராட்டுக்களை சொல்லி விட்டு எங்களுக்கு தேவையான குறைகளையும் அல்லது தேவைகளையும் சொல்வோம். அது நிறைவேற்றப்படும். நீங்கள் நல்லது செய்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும். உங்களை பாராட்ட இப்படி பல அரங்குகள் உங்களுக்காக காத்திருக்கிறது என்றார் கமல்ஹாஸன்.
கொடுத்து வைத்தவர்கள்-மம்முட்டி:
நடிகர் மம்முட்டி பேசும்போது, நான் மலையாள நடிகர் மட்டுமல்ல. தமிழ் நடிகரும் கூட. தமிழ் திரையுலகத்தினர் கொடுத்து வைத்தவர்கள். கலைஞரை பெற்று இருக்கிறார்கள். உங்களுக்கு தமிழ் என்றால் உயிர். தமிழக மக்களுக்கு நீங்கள் என்றால் உயிர் என்றார்.


Click it and Unblock the Notifications











