நடிகர் ஜெய்க்கு தடை?- தயாரிப்பாளர்கள் 'கடுகடு'!

விஜய் நடித்த பகவதி படத்தில், அவருக்கு தம்பியாக அறிமுகமானவர், ஜெய். இவர், இசையமைப்பாளர் தேவாவின் தம்பி சம்பத்தின் மகன். சென்னை-28, சுப்பிரமணியபுரம் ஆகிய 2 படங்களின் மூலம், ஜெய் பிரபலமானார்.
இப்போது, அர்ஜீனன் காதலி, அதே நேரம் அதே இடம், அவள் பெயர் தமிழரசி, வாமணன் ஆகிய 4 படங்களில் நடித்து வருகிறார்.
இவர் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 'நான் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களில், வாமணன் மட்டுமே வெற்றி பெறும். மற்ற படங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு படம் ஒரே ஒரு வாரம்தான் ஓடும். இன்னொரு படம் பதினைந்து நாட்களுக்கு மேல் தாங்காது' என்று கூறியிருந்தார்.
இந்த பேட்டி, பட அதிபர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜெய்யை வைத்து படம் தயாரிக்கும் பட அதிபர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார்கள். அந்த புகாரின் மீது நேற்று விசாரணை நடந்தது.
அப்போது, ஜெய் தொடர்ந்து நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் வற்புறுத்தினார்கள். அர்ஜுனன் காதலி, அதே நேரம் அதே இடம், அவள் பெயர் தமிழரசி ஆகிய மூன்று படங்களையும் ஜெய் உடனடியாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும், அதன்பிறகு அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது? என்பதை முடிவு செய்யலாம் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் அவர் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள சௌந்தர்யா ரஜினி தயாரிக்கும், கோவா படத்தில் நடிக்க இப்போதைக்கு தற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வருகிற 15ம் தேதி துவங்குவதாக இருந்தது.


Click it and Unblock the Notifications