'வாவ்.. பின்னிட்டப்பா...!'-கமலிடம் ரஜினி

நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கும் கமல்ஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் சென்னையில் உள்ள பல பிரிவியூ திரையரங்குகளில் காட்டப்பட்டு வருகின்றன. கடந்த இரு தினங்களாக இத் திரையரங்குகளில் தசாவதார திருவிழாக்கோலமாக உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போர்பிரேம்ஸ் பிரிவியூ திரையரங்கில் திரையுலகப் பிரமுகர்களுக்காக சிறப்புக் காட்சிகள் நடைபெற்று வருகின்றன. முதல் காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் கே.பாலச்சந்தர், நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, ஜோதிகா, பிரபு, ராம்குமார், நாகேஷ், மனோரமா, சந்தானபாரதி என பலரும் கலந்து கொண்டு படம் பார்த்து ரசித்தனர்.
படம் முடிந்ததும் வெளியில் வந்த ரஜினி, "பிரமாதம்... ரியலி எக்ஸலெண்ட்... பின்னிட்டப்பா.." என தன் பாணியில் கமலைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார். வெகுநேரம் வரை ஒவ்வொரு காட்சியையும் வியந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தார் கமல்.
இயக்குநர் கே.பாலச்சந்தரும் கமல்ஹாசனை வெகுவாகப் பாராட்டினார்.
படம் பார்த்ததும் நெகிழ்ந்து போன மனோரமா, தனது பாராட்டுக்களை கண்ணீராக வெளிப்படுத்தினார். கமலின் கைகளைப் பிடித்துக் கொண்டு ''எம் புள்ள''.. என்ற வார்த்தை மட்டுமே மனோரமாவிடம் இருந்து வந்தது.. மற்றபடி பேச முடியாமல் தவித்தார்.
த ஹிந்து ஆசிரியர் என்.ராம், நாசர், ஜெயம்ரவி, விஷால், ஜீவா, ஸ்ரீகாந்த், சிபிராஜ், கிரேஸி மோகன், ஆர்.சி.சக்தி, சுந்தர் சி, நடிகைகள் சந்தியா, குஷ்பூ மற்றும் பலரும் தசாவதாரம் பார்த்து மகிழ்ந்தனர்.
அரசியல் பிரமுகர்களுக்கான பிரிவியூ காட்சி சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நேற்று திரையிடப்பட்டது.


Click it and Unblock the Notifications











