அப்போ திட்டு..இப்போ விளக்கம்!-இது சூர்யா

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"ஆதாரமற்ற செய்திகளைப் படங்களுடன் பிரசுரம் செய்ததில், அந்தக் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருமே காயப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்கிற ஒரு மேடையில் என் கருத்துக்களை நான் பகிர்ந்து கொண்டேன்.
ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டபோது, நானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருகிறேன். மன உளைச்சல்களைச் சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் மீடியாவை சேர்ந்த நண்பர்கள்தான் ஆதாரமான செய்திகளை வெளியிட்டு எனக்கு ஆறுதல் அளித்துள்ளனர்.
அருமையான தொழில்...
என்னுடைய பேச்சில், அனைவருக்கும் வழிகாட்டக் கூடிய, சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிற, எல்லோருக்கும் ஆசிரியராக இருக்கிற அருமையான தொழில், என்றே பத்திரிகைகளைப் பற்றி சொன்னேன். எல்லாத் துறையிலும் இருப்பதுபோல மீடியாவிலும், ஒரு சிலரின் செயல்பாடுகள் மீட்கமுடியாத பாதிப்பை, இழப்பை தனிப்பட்ட நபர்களுக்கு ஏற்படுத்துகின்றன. அதைக் 'கண்டிக்கிற உரிமை' ஒரு நடிகனாக இல்லாமல், சக மனிதனாகவே எனக்கு இருக்கிறது.
அவதூறு செய்திகளைப் பற்றி நான் பேசிய கருத்துக்கள், ஒட்டுமொத்த மீடியாவைப் பற்றி பேசியதாக செய்திகள் வெளிவருகின்றன. என் மீது அக்கறையுள்ள பத்திரிகை நண்பர்களும் என்னிடம் இதுகுறித்து பேசினார்கள்.
பத்திரிகை தர்மத்துக்கு விரோதமாக...
பத்திரிகை தொழிலுக்கும், தர்மத்துக்கும் விரோதமாக இருக்கிற ஒரு சிலரைப் பற்றி நான் வெளிப்படுத்திய வருத்தங்கள், ஒட்டுமொத்த பத்திரிகைகளையும், பத்திரிகையாளர்களையும் சொன்னதாக திரித்துக் கூறப்படுகிறது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை உலகத்தோடு என் குடும்பம் நல்லுறவு பேணி வந்திருக்கிறது என்பதை நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை. உண்மைக்கு மாறான அத்தகைய திரிபுகளை உங்கள் கவனத்துக்கு நேரடியாக கொண்டு வரவே இந்த விளக்கம்.
பத்திரிகை நண்பர்களோடும், மீடியா உலகத்தோடும் எனக்கு இருந்து வரும் ஆரோக்கியமான நல்லுறவை நான் பெரிதும் மதிக்கிறேன். என் கருத்துகள் தவறாக திரிக்கப்படுவதைக் கவனத்துக்குக் கொண்டு வந்த, என் பத்திரிகை நண்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











