'அரசியல் ரீதியாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் உள்ளேன்!' - விஜய்

இன்று சென்னையில் தனது கல்யாண மண்டபகத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் சந்தித்தார் விஜய்.
இந்த சந்திப்பில் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாகக் கூறியிருந்ததால் நூறுக்கும் மேற்பட்ட பத்திரிகை, இணையதள, தொலைக்காட்சி செய்தியாளர்கள் குழுமிவிட்டனர்.
இந்த சந்திப்பில் விஜய் கூறியதாவது:
கடந்த சில தினங்களாகவே எந்தப் பத்திரிகையைத் திறந்தாலும் எனது அரசியல் பிரவேசம் பற்றிய செய்திதான் முதலில் நிற்கிறது. உண்மையைச் சொன்னால் நான் அந்தளவுக்குப் பெரிய ஆள் கிடையாது.
ராகுல் காந்தியை டெல்லியில் நான் சந்தித்தது உண்மை. எனது திரைப்படங்கள், நான் செய்துவரும் மக்கள் பணிகளைப் பற்றிதான் நிறைய பேசினார். அரசியல் பற்றியும் பேசினோம். ஆனால், அதை இப்போது சொல்வது நாகரீகமாக இருக்காது.
அவரை சந்தித்தபோது அவர் என்னை நடத்திய விதம் எனக்கு மிக்க பிடித்திருந்தது. நானும், காங்கிரசும் இளைஞர்களை அணுகுவதில் ஒரே அணுகுமுறை தான் கொண்டுள்ளோம்.
இந்தியாவையே மாற்றிக் காட்ட வேண்டும் எனும் வேட்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நம்பிக்கை நட்சத்திரமான அவருடன் உரையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இது தமிழக மக்களுக்கும் என் ரசிகர்களுக்கும் கிடைத்த பெருமை(!?) என்பேன்.
எதிர்கால இளைஞர்களை அரவணைத்து ஒருங்கிணைத்துச் செல்லும் பொறுப்பு எனக்கிருக்கிறது. எனவே இப்போதைக்கு எந்த அரசியல் முடிவையும் நான் எடுக்கவில்லை, எடுக்க முடியவில்லை. இப்போதைக்கு மக்கள் இயக்கத்தைச் சிறப்பாகத் தொடரப் போகிறேன்.
அரசியல் குறித்து உடனடியாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாத நிலையில் நான் உள்ளேன் என்பதே உண்மை.
தமிழக மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும். அதற்காக களத்தில் இறங்கிப் போராடுவேன். தொலைநோக்குப் பார்வையோடு ஒரு வளமான, வலிமையான அரசாங்கத்தை உருவாக்க எநதக் கட்சி முனைகிறதோ அவர்களோடு நான் கை கோர்ப்பது பற்றி முடிவு எடுப்பேன்.
வாழ்க தமிழ்.... வெல்க பாரதம் என்றார் விஜய்.


Click it and Unblock the Notifications











