மீண்டும் கமல் - ரஜினி!

கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ரஜினிகாந்த், அவரால் வார்த்து எடுக்கப்பட்டவர் கமல். இருவரும் இணைந்து பல முத்திரைப் படங்களைக் கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் இருவருக்கும் தனி ஸ்டைல், திறமை உள்ளால் தனித் தனியாக நடிக்கலாம் என்று கமல் கூறவே இருவரும் பிரிந்து தனித் தனியாக பின்னி எடுக்க ஆரம்பித்தனர். இன்று தமிழ்த் திரையுலகின் இரு பெரும் தூண்களாக மாறி வியாபித்து நிற்கின்றனர்.
இருவரும் பிரிந்து 20 ஆண்டுகளாகி விட்டன. இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம் இளமை ஊஞ்சலாடுகிறது. அதன் பின்னர் தில்லுமுல்லு படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கமல்ஹாசன் தலையைக் காட்டி கலகலக்க வைத்தார்.
இந்த நிலையில் இருவரும் மீண்டும் இணையவுள்ளனர். ரஜினியின் குசேலன் படத்தில்தான் இந்த விசேஷ கூட்டணி இடம் பெறுகிறது.
மலையாளத்தில் வெளியான கத பறயும் போள் படத்தைத்தான் பி.வாசு குசேலன் என்ற பெயரில் தமிழிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்து வருகிறார். முதலில் ஒரிஜினல் படத்தைப் போலவே எடுக்க ரஜினி வலியுறுத்தினார்.
ஆனால் அப்படி எடுத்தால் இன்னொரு வள்ளி போல படம் மாறி விடும் என்று நினைத்த வாசு, ரஜினியை பலவிதங்களிலும் சமாதானமாக பேசி ரஜினியின் கேரக்டருக்கு முக்கியத்துவம் வருவது போலவே எடுக்க சம்மதிக்க வைத்து விட்டார்.
இதையடுத்து படத்திற்கு வியாபார ரீதியாக என்னென்ன மேட்டரை எல்லாம் சேர்க்க முடியுமோ அதையெல்லாம் சேர்க்க ஆரம்பித்துள்ளார் வாசு.
இதன் விளைவு, ரஜினி தவிர பெரும் நட்சத்திரக் கூட்டமே படத்தில் இடம் பெறுகிறது. பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹீரோயின் நயனதாரா தவிர த்ரிஷா, ஸ்னேகா, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட நாயகிகள் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு ஆடவுள்ளனர்.
இந்த நிலையில் சூப்பர் மிக்ஸ் ஆக கமல்ஹாசனும் குசேலன் படத்தில் கால் காட்டவுள்ளார். அதாவது ரஜினியுடன் இணைந்து கலக்கல் டான்ஸுக்கு ஆடவுள்ளார் கமல்.
பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இருவரையும் மீண்டும் இணைக்க முயன்று முடியாமல் போனதை பி.வாசு முடித்துக் காட்டி சாதனை படைத்துள்ளார்.
செமத்தியான விருந்து படைக்க பி.வாசு முடிவெடுத்து விட்டார். ருசிக்க ரசிகர்களுக்கு கசக்கவா செய்யும்?


Click it and Unblock the Notifications











