தயாரிப்பாளரிடம் சம்பளத்தை திருப்பித் தந்த விமல்!
நல்ல படம்... அருமையான படைப்பு என போற்றப்படும் சில படங்கள் வணிக ரீதியில் தாக்குப் பிடிக்க முடியாத சூழல் உருவாகிறது. இதில் ரசிகர்களின் பங்கும் மீடியாவின் பங்கும் 'மகத்தானது'!
மசாலா படங்களைத் தாங்கு தாங்கென்று தாங்கும் இவர்கள் நல்ல படங்களைக் கண்டுகொள்ளாமல் போவதால் உயர்ந்த லட்சியத்தோடு வரும் படைப்பாளிகள் மசாலா ரூட்டுக்குத் தாவுகிறார்கள்.
சமீபத்தில் வெளியாகி, மிக அருமையான படைப்பு என விமர்சகர்களால் புகழப்பட்ட சற்குணத்தின் வாகை சூட வா படத்துக்கும் அப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் வணிக ரீதியாக ஆதரவு தராததால் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம்.
ஒருவேளை இந்தப் படம் ஓடாவிட்டால் என் சம்பளத்தை திருப்பித் தந்துவிடுகிறேன் என படத்தின் நாயகன் விமல் முன்பே தயாரிப்பாளர் முருகானந்தத்துக்கு வாக்களித்திருந்தாராம்.
இந்த நிலையில் படம் வணிக ரீதியாகப் போகவில்லை என்று தெரிந்ததும், தனது வாக்கைக் காப்பாற்றும் விதத்தில் சம்பளப் பணம் முழுவதையும் திருப்பிக் கொடுத்துள்ளார் விமல். அடுத்து இரு புதிய படங்களில் ஒப்பந்தமான அவர், அந்தப் படங்களுக்காக வாங்கி அட்வான்ஸ் தொகையை முருகானந்தத்துக்குக் கொடுத்து, அவரை சிக்கலிலிருந்து காப்பாற்றியுள்ளார்.
விமலின் இந்த செயல் கோடம்பாக்கத்தையே வியக்க வைத்துள்ளது. சினிமா காப்பாற்றப்பட வேண்டும் என்ற அவரது உயர்ந்த நோக்கத்தைக் கண்டு நெகிழ்ந்துவிட்டாராம் தயாரிப்பாளர். வாகை சூட வாவில் மிக கஷ்டப்பட்டு உழைத்திருந்தார் விமல். சேற்றிலும் புழுதியிலும் புரட்டி எடுத்திருந்தார்கள் அவரை. இப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்ததை, தயாரிப்பாளருக்கு திருப்பித் தந்திருப்பது அவரது உயர்ந்த குணத்தைக் காட்டுவதாக தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இப்படி பணத்தைத் தந்ததோடு, அடுத்த படத்தில் இலவசாகவே நடிச்சுத் தர்றேன் கவலைப்படாதீங்க என்று தயாரிப்பாளரை திக்கு முக்காட வைத்துள்ளார் விமல்.


Click it and Unblock the Notifications











