முதல் மனைவியின் சதி! - ராஜ்கிரண் பரபர புகார்
காவலன் படத்தில் பெரிய மனிதராக வரும் ராஜ்கிரணை கண்ணை இமை காப்பதுபோல காப்பார் அவரது பாடிகார்டான விஜய்.
ஆனால் நிஜத்தில், தனது பாடிகார்ட் மற்றும் உதவியாளராக உள்ள ஒரு நபர் தன்னை மிரட்டுவதாக போலீஸில் புகார் அளித்துள்ளார் ராஜ்கிரண்.
நடிகர்-இயக்குநர் -தயாரிப்பாளர் ராஜ்கிரண் மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய முத்துக்குமார் என்பவர் நந்தம்பாக்கம் போலீசில் கடந்த வாரம் புகார் அளித்தார். அதில் ராஜ்கிரண் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் முத்துக்குமார் புகார்களை மறுத்துள்ளார் ராஜ்கிரண். அவர் கூறுகையில், முத்துக்குமார் சில மாதங்கள் எனது வீட்டில் வேலை பார்த்தார். இப்போது அவர் வேலையில் இல்லை. ஏற்கனவே அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என தெரிய வந்தது. அவரை நான் கடைசியாக பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது என் மீது போலீசில் பொய் புகார் அளித்துள்ளார்.
கடந்த சில வருடங்கள் எனக்கு கஷ்டமாகவே நகர்ந்தன. அமைதியில்லாமல் தவித்தேன். பத்மஜோதியை 2 வது திருமணம் செய்த பிறகுதான் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்பட்டது. என் திருமண வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் முத்துக்குமார் போலீசில் அளித்துள்ள புகாரால் எனக்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது. அந்த புகார் அடிப்படையில்லாதது. இதற்கு பின்னால் என் முதல் மனைவி இருக்கிறார். அவர் தூண்டுதல் பேரில்தான் முத்துக்குமார் இந்த புகாரை அளித்துள்ளார்.
எனது புகழை கெடுப்பதே அவர்கள் நோக்கமாக உள்ளது. முத்துக்குமார் இன்னும் முதல் மனைவியுடன் தொடர்பில்தான் இருக்கிறார். இப்போது எனக்கு பாடிகார்ட்டோ டிரைவரோ இல்லை.
முதல் திருமணத்தில் பிரச்சினைகளை சந்தித்தேன். இப்போது அதில் இருந்து மீண்டு விட்டேன். என் மேல் பொய் புகார் அளித்து சிறுமைத்தனமான காரியங்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறேன், என்றார்.


Click it and Unblock the Notifications











