ராமநாதபுரத்தில் திமுக எம்.பி. ஜே.கே.ரித்திஷ் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட நகர்மன்ற செயலாளர் ஆர்.ஜி. ரத்தினம் என்பவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால் திமுக மேலிடம் இவருக்கு சீட் வழங்கவில்லை.
இவருக்கு பதிலாக, திமுக சார்பில் நாகநாத சேதுபதி என்பவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் போட்டியிடுகிறார். இதனால் ரத்தினம் கடும் அதிருப்தியில் இருந்தார்.
மேலும், ரத்தினத்திற்கும், திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கவேலனுக்கும் இடையே ஏற்கனவே, கோஷ்டி தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் திமுகவினர் ஈடுபட்டனர். அப்போது, அண்ணாநகர் பகுதியில் உள்ள குருவிக்காரன் சாலையில் தி.மு,.க. வேட்பாளர் நாகநாத சேதுபதிக்கு ஆதரவாக தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கவேலன், எம்.பி. ரித்திஷ் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ரத்தினம் வீடு அருகே திமுகவினர் வந்த போது ரத்தினத்தின் தங்கை கலா, பிரசாரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் இரு தரப்பினர் இடையே கல்வீச்சு, சோடா பாட்டீல் வீச்சு நடைபெற்றது. இந்த கலவரதில் கலா, சரவணன், செல்லபாண்டி ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் மூன்று பேரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், இந்த கலவரத்தில், திமுக எம்.பி.ரித்தீஷ் -ன் மூன்று கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அரிவாள், உருட்டுக் கட்டைகளுடன் நுழைந்த கும்பல் அவரது வீடு மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவத்தால், ராமநாதபுரம் மாவட்டத்தில் பதட்டம் நிலவி வருகின்றது.
திமுகவினரின் இந்த மோதல் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











