ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்!

இனி அடுத்து வரும் பந்தயங்களில் பங்கேற்பாரா அல்லது பட வேலைகளில் பிஸியாகிவிடுவாரா என்பது தெரியவில்லை.
அசல் படத்துக்குப் பிறகு தனது 50 வது படம் குறித்த அறிவிப்பை வெளியிடவிருந்த அஜீத், முதல்வர் விழா சர்ச்சைகளுக்குப் பிறகு, சினிமாவுக்கு சின்ன பிரேக் கொடுத்துவிட்டு தனக்கு விருப்பமான கார் ரேஸுக்கு கிளம்பிப் போய்விட்டார். இதற்கான மொத்த செலவையும் யார் தலையிலும் கட்டாமல் தானே பார்த்துக் கொண்டார்.
கிட்டத்தட்ட ரூ 10 கோடி வரை செலவழித்து மலேசியா, லண்டன், மொராக்கோ, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடந்த முதல்நிலை பார்முலா 2 பந்தயங்களில் பங்கேற்றார். சில போட்டிகளில் கடைசி இடம் பிடித்தார், சில போட்டிகளில் சற்று முன்னணியில் வந்தார்.
இதற்கிடையே அவரது 50 வது படம் குறித்து பல்வேறு வதந்திகள் வரத் துவங்கின. இந்தப் படத்தை இயக்கும் கவுதம் மேனனுக்கும், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கும் அஜீத் மீது மனவருத்தம் இருப்பதாக கூறப்பட்டது.
மேலும் அஜீத்தின் நலம் விரும்பிகள், "உங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாம் உங்களைத் தாண்டிச் செல்கிறார்கள். ஆனால் நீங்கள் பின்னோக்கிச் செல்வது போல உள்ளது. எனவே ரேஸெல்லாம் வேண்டாம்.. படத்தை அறிவியுங்கள்" என்று அறிவுறுத்தினார்கள்.
இப்போது, முக்கிய பந்தயமான ஜெர்மன் ரேஸில் பங்கேற்காமல் விட்டுள்ளார் அஜீத். அடுத்தடுத்த ரேஸ்கதளில் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை.
இதுகுறித்து அஜீத்தின் மீடியா தொடர்பாளர் வி கே சுந்தரிடம் விசாரித்தபோது, "அஜீத் சென்னையில்தான் உள்ளார். கவுதம் மேனன் - தயாநிதி அழகிரியும் இணைந்து 50 வது படம் செய்வது உறுதி. வேலைகள் நடக்கின்றன. படம் அக்டோபரில் துவங்கப்போகிறார்கள். அதற்கு முன்பே அறிவிப்பு வரும்...," என்றார்.


Click it and Unblock the Notifications











