விக்ரமுக்கு இன்று பிறந்த நாள்!

சிறந்த நடிப்புக்காக தேசிய விருது பெற்ற விக்ரம், மிகுந்த போராட்டங்களுக்கிடையேதான் இந்த இடத்தைப் பிடித்தார். தனக்குக் கிடைத்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள மிகுந்த கவனத்துடன் கதைகளைத் தேர்வு செய்தார். அதன் விளைவு இன்று யாருடன் ஒப்பிட முடியாதபடி, தனக்கென ஒரு தனி இடத்தைக் கோடம்பாக்கத்தில் பெற்றுள்ளார்.
விக்ரம் நடிப்பில் அடுத்து வெளிவரும் படம் கந்தசாமி. தமிழில் ஒரு ஹாலிவுட் ஸ்டைல் திரைப்படம் என்ற சொல்லுக்கு முழுமையான தகுதியுடன் இந்தப் படம் வெளிவருகிறது.
இந்தப் படத்தில் தனக்கான அனைத்துப் பாடல்களையும் விக்ரமே பாடியுள்ளார். தியாராஜ பாகவதருக்குப் பின், தனக்கான அனைத்துப்பாடல்களையும் தானே பாடிய ஹீரோ என்ற பெருமை இவருக்குண்டு. கமலுக்கும் இந்தப் பெருமை உண்டு என்றாலும், அவர் தனது படங்களில் ஓரிரு பாடல்களோடு நிறுத்திக் கொள்வது வழக்கம்.
இதற்கு அடுத்து அவர் நடிக்கும் படம் உலக அளவில் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுதான் மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராயுடன் அவர் இணையும் ராவண் (அசோகவனம்).
கடந்த ஆண்டு இவருக்கு ஒரே படம். அதுவும் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் சொதப்பி விட்டது. இந்த ஆண்டு அதற்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து இரு பெரிய படங்களைத் தருகிறார்.
வாழ்த்துக்கள் விக்ரம்!


Click it and Unblock the Notifications











