சுனாமி சோகம்... ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி!

வழக்கமாக தான் செய்யும் உதவிகளைக் காட்டிலும் பல மடங்கு அதிக பணம் மற்றும் பொருள் உதவியைச் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ரஜினி.
தனியொரு மனிதராக சில கோடி ரூபாயை வழங்குவதை விட, நிறைய நடிகர்கள் மற்றும் நண்பர்களையும் உதவச் செய்து, பாதிக்கப்பட்ட நகரங்களின் மக்கள் பரவலாக நன்மை அடையும் வகையில் இந்த உதவி அமைய வேண்டும் என்று கூறியுள்ளார் ரஜினி.
ரஜினியின் இந்த முயற்சிக்கு நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்டோரும் ஆதரவளித்துள்ளனர். கமல்ஹாஸனும் தன்னால் இயன்றவரை உதவுவதாக ரஜினியிடம் உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.
முதல் கட்டமாக, பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானுக்கு ஒரு குழு நேரில் போய் சேதங்களை மதிப்பிட உள்ளது. இந்த சேதங்களில் அரசாங்கம் சரி செய்வது போக, பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானிய மக்களின் குடும்பங்களுக்கு நிதி, பொருள் மற்றும் வீடுகள் மறுநிர்மாணத்துக்கான கட்டுமானப் பொருள்களை ரஜினி வழங்கவிருக்கிறார்.
இதுகுறித்து ராகவேந்திரா மண்டப நிர்வாகிகளிடம் விசாரித்ததில், இதுவரை இல்லாத அளவுக்கு, ஜப்பானிய மக்களின் துயர் துடைக்க ரஜினி சார் பெரும் முயற்சி எடுத்து வருவது உண்மைதான். இந்தத் திட்டம் முழுமையான பிறகு, விவரங்களை சாரே சொல்வார், என்றனர்.
இந்திய திரையுலகில் எம்ஜிஆருக்குப் பிறகு ஜப்பானில் ரசிகர் மன்றம் தோன்றியது ரஜினிக்கு மட்டுமே. ஜப்பானிய மக்கள் ரஜினிக்கு தங்களின் விருப்ப நாயகன் என்ற அந்தஸ்தைக் கொடுத்துள்ளனர்.
ஜப்பானில் அதிக நாட்கள் ஓடிய ஒரே இந்தியப் படம் ரஜினியின் முத்துதான். வசூலிலும் பெரும் சாதனை படைத்தது இந்தப் படம். ஜப்பானிய பாராளுமன்றத்திலும் இதுகுறித்து முன்பு பிரதமர் மன்மோகன் சிங் பேசியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











