ஷாரூக்குடன் ஐபிஎல் போட்டி பார்க்க ரூ. 32,000 கட்டணம்
ஷாரூக் கானுடன் ஐபிஎல் மேட்ச் பார்க்க ரூ 32000 கட்டணம்... ஆனால் ரசிகர்களுக்கு பாதுகாப்பு?
ஐபிஎல் என்ற பெயரில் திரும்பிய பக்கமெல்லாம் பணம் கறக்கிறார்கள் கிரிக்கெட் வாரியத்தினரும் விளம்பரதாரர்களும்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தை ஷாரூக்கானுடன் அமர்ந்து பார்க்க ஏற்பாடு செய்திருந்தனர்.
கொல்கத்தா அணி உரிமையாளர் நடிகர் ஷாருக்கான்தான். இதற்காக தனி விவிஐபி கேலரியும் அமைத்திருந்தனர்.
ஷாருக்காருடன் அமர்ந்து போட்டியை ரசித்த ரசிகர்களிடம் தலை ரூ.32 ஆயிரம் கட்டணம் வசூலித்தனர்.
ஆனால் இந்த கேலரியில் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கவில்லையாம். குறிப்பாக தீ விபத்து ஏற்பட்டால், அதற்கான முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படவில்லையாம்.
டிக்கெட் போட்டு பணத்தை வசூலிப்பதில் காட்டிய ஆர்வத்தை, அவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் காட்டவில்லை கிரிக்கெட் வாரியத்தினர் என்று குற்றம்சாட்டப்பட்டது.
இதுபற்றி மேற்கு வங்க அரசிடம் புகார் செய்யப்பட்டது, ரசிகர்கள் தரப்பில்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி மேற்கு வங்க தீயணைப்புத் துறை அமைச்சர் ப்ரதிம் சட்டர்ஜி உத்தரவிட்டுள்ளார். இந்த விஷயத்தில் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பிஸ்வரூப் டே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறுத்த மம்தா!
இந் நிலையில், ஈடன் கார்டனில் நடந்த இன்னொரு போட்டியை அந்த விவிஐபி கேலரியில் பார்க்க வருமாறு மம்தா பானர்ஜிக்கு கொல்கத்தா அணியின் இணை உரிமையாளர் நடிகை ஹுஹி சாவ்லா அழைத்துள்ளார். அழைப்பை ஏற்றுக் கொண்டாலும், சர்ச்சைக்குரிய அந்த விவிஐபி கேலரியில் அமர மாட்டேன் என்று கூறி விட்டாராம் மம்தா. வழக்கமாக ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் காலரியில் அவர்களுடன் அமர்ந்துதான் பார்ப்பேன் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்!


Click it and Unblock the Notifications











