நான் என்ன தவறு செய்தேன்-சிம்பு கண்ணீர்

சில தினங்களுக்கு முன் நடிகர் சிம்புவின் கார் திருடுபோனதாக எழுந்த பிரச்சினையில் முன்னுக்குப் பின் முரணாக பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இதுகுறித்து விளக்குவதற்காக ராஜேந்தரும் அவர் மகன் சிம்புவும் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
சிம்பு கூறியதாவது:
என் கார் திருடு போனதாகக் கூறப்படும் நாளன்று நான் ஊரிலேயே இல்லை. சிலம்பாட்டம் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றிருந்தேன். 14ம் தேதிதான் சென்னை திரும்பினேன். ஆனால் நான் சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் குடித்துவிட்டு காரைத் தொலைத்துவிட்டதாக வீணாக பழிபோடுகிறார்கள்.
என் தம்பி குறளரசன்தான் அன்று காரை எடுத்துக் கொண்டு போய் ஹோடலில் சாப்பிட்டிருக்கிறான். அவன் குடிக்கமாட்டான்.
என்னைப் பற்றி ஏராளமான கிசுகிசு வந்துள்ளன. அப்போதெல்லாம் கூட பொறுத்துக்கொண்டு இருந்து விட்டேன்.
ஆனால், ஊரிலேயே இல்லாத ஒருவரை இருந்ததாக கூறி எழுதுவது என்ன பத்திரிக்கை தர்மம்? ஏன் என்னை மட்டுமே குறி வைத்து தாக்கி எழுதுகிறார்கள்.
என் மீது பகையுணர்வை ஏன் காட்டுகிறார்கள். என் கேரக்டரை கெட்டதனமாக பொதுமக்கள் முன்னிலையில் காட்டுகிறார்கள். அப்படி நான் என்ன தவறு செய்தேன் (கண்களில் கண்ணீர்).
நான் இலங்கையில் படப்பிடிப்பில் இருந்ததற்கான ஆதாரங்களை நான் வைத்திருக்கிறேன். இதை மறுப்பவர்கள், நான் சென்னையில் இருந்ததற்கான ஆதாரங்களைத் தர முடியுமா...என்றார்.
டி.ஆர்...
பின்னர் பேசிய டி.ராஜேந்தர், என் மகனின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் வேண்டுமென்றே பொறாமையில் பொய்ச் செயதிகளைப் பரப்பி வருகிறார்கள்.
இந்த செய்தி குறித்து நான் தகுந்த விளக்கம் அளித்தும், அதைப் பிரசுரிக்கவில்லை. ஆனால் பொய்யான ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப எழுதி அவன் வளர்ச்சியைக் கெடுக்கிறார்கள்.
என் மகன் இதுவரை தன் வாழ்க்கையில் மது அருந்தியதே கிடையாது. ஆனால் அவன் குடித்திருந்ததாக எழுதுகிறார்கள்.
வேண்டுமானால் மருத்துவர் மூலம் சோதனை செய்து பாருங்கள். உண்மை தெரியும். தமிழ் நாட்டில் நான் தமிழனாக பிறந்தது தான் பாவமா? அதனால்தான் என் மகன் சிம்புவைப் பற்றி தொடர்ந்து தவறாக எழுதுகிறார்களா?
தேவைப்பட்டால் சிம்பு இலங்கையில் படப்பிடிப்பில் இருந்ததற்கான ஆதரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். அதுமட்டுமல்லாமல் அவதூறு செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள் மீது மான நஷ்டஈடு வழக்கு தொடருவேன். மனித உரிமை கமிஷனுக்கும் செல்வேன் என்று கொதிப்புடன் பேசினார்.
இதன் பின்னணியில் ஏதேனும் அரசியில் கட்சி இருக்கிறதா என்று விஜய.டி.ராஜேந்திரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, கண்டிப்பாக ஒரு அரசியல் கட்சி இருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications











