இலங்கைத் தமிழர்களுக்கு மம்முட்டி ஆதரவு

தமிழ் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வெகு சில மலையாள நடிகர்களில் முக்கியமானவர் மம்முட்டி. பெரும் இடைவெளிக்குப் பின்னர் அறுவடை என்ற படத்தில் நடிக்கிறார் மம்முட்டி. மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி உள்ளிட்ட படங்களைத் தயாரித்த பங்கஜ் புரடக்ஷன்ஸ் ஹென்றியே இப்படத்தையும் தயாரிக்கிறார்.
அரவிந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அர்ஜூன், சினேகா, ஷ்ரத்தா ஆகியோரும் நடிக்கின்றனர்.
தற்போது படத்தின் இறுதிக் கட்ட ஷூட்டிங் சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் நடந்து வருகிறது.
படப்பிடிப்பு இடைவெளியின்போது செய்தியாளர்களைச் சந்தித்தார் மம்முட்டி. அப்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் நடிகர்-நடிகைகள் எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். மலையாள நடிகர்கள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இந்த பிரச்சினை பற்றி உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு மம்முட்டி பதிலளிக்கையில், பாதிக்கப்பட்ட மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களுக்கு என் ஆதரவு உண்டு என்றார்.
தமிழில் ஏன் பெரிய இடைவெளி விட்டு விட்டீர்கள் என்ற கேள்விக்கு, தமிழ் படங்களை நான் வேண்டாம் என்று சொல்வதில்லை. என்னை நடிக்க அழைத்தால், நிச்சயமாக நடிப்பேன். 2 வருடங்களுக்கு ஒரு தமிழ் படமாவது நடிக்க ஆசைப்படுகிறேன். தமிழ் பட உலகுக்கும், மலையாள பட உலகுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மொழிதான் வித்தியாசம்.
மலையாளத்தை விட தமிழ்தான் மிக தொன்மையான மொழி. மலையாள மொழி உருவாகி 500 வருடங்கள்தான் ஆகிறது. ஆனால் தமிழ், 5 ஆயிரம் வருடங்களுக்கு முந்திய மொழி. தமிழில் இருந்துதான் மலையாளம் உருவானது. திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாய், தமிழ்தான் என்றார் மம்முட்டி.
மேலும் தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை எனவும் தெரிவித்தார் மம்முட்டி.


Click it and Unblock the Notifications











