ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து

ரஜினி ரசிகர் மன்ற புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள சுதாகர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினிகாந்தின் பிறந்தநாள் அடுத்த மாதம் 12ம் தேதி வருகிறது. இந்த ஆண்டு பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தார்கள்.
ஆனால் இலங்கை தமிழர்கள் துன்பப்படும் வேளையில் பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்க்கும்படி ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இதுபற்றிய முறையான அறிக்கை அவரே நேரடியாக வழங்க இருக்கிறார்.
இதனை ரசிகர்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
ரஜினி பிறந்த நாளை வழக்கமாக ரசிகர்கள் தடபுடலாக கொண்டாடுவது வழக்கம். கோவி்ல்களில் சிறப்பு வழிபாடுகள், தங்கத் தேர் இழுத்தல், அன்னதானம், ரத்ததானம் உள்ளிட்டவற்றில் அவர்கள் ஈடுபடுவார்கள்.
சமீபத்தில் கமல்ஹாசனும் தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது நினைவிருக்கலாம்.
குசேலன்-முற்றுப் புள்ளியா... கமாவா?:
இதற்கிடையே குசேலன் திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்ஈடு பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்பட்டுவிட்டதாக அந்தப் படத்தை வாங்கித் திரையிட்ட பிரமிட் சாய்மிரா நிறுவனத் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ரஜினி கெளரவ வேடத்தில் நடித்த குசேலன் படத்தை வாங்கித் திரையிட்டதால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுமாறு திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தி வந்தனர். இவர்களுக்கு முழுமையாக நேற்று நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பிரமிட் சாய்மிரா சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் சாமிநாதன் கூறியதாவது:
குசேலன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை மூன்று கட்டங்களாக திருப்பிக் கொடுத்துவிட்டோம்.
முதல் கட்டமாக, பிரமிட் சாய்மிரா நேரடியாக வெளியிட்ட திரையரங்குகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் சரிகட்டப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, தென்னாற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இவர்களுடன் சில விநியோகஸ்தர்களுக்கும் நஷ்ட ஈடு தரப்பட்டு விட்டது.
மூன்றாவது கட்டமாக, பிரச்சினை செய்துவந்த திருச்சி, வட ஆற்காடு மற்றும் கோவை மாவட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கு திங்கள்கிழமை (நவ.17) முழுவதுமாக பணம் தரப்பட்டு, செட்டில் செய்யப்பட்டுள்ளது. இனி யாரும் நஷ்டக் கணக்கு காட்டி எங்களிடம் வரக்கூடாது, என்றார் சாமிநாதன்.
இந்தப் பேட்டியின் போது விநியோகஸ்தர்கள் கல்பாத்தி அகோரம், கலைப்புலி சேகரன், திருப்பூர் சுப்பிரமணியன் மற்றும் கவிதாலயா நிறுவனத்தின் கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
பிரச்சினை இத்துடன் முடியுமா... அல்லது வேறு ரூபத்தில் தொடருமா... பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











