கவிஞரும் நடிகருமான பா விஜய் வீடடில் கொள்ளை முயற்சி!
கவிஞரும் நடிகருமான பா விஜய் வீட்டில் திருட முயன்ற இரு இளைஞர்கள், பா விஜய் மனைவி சத்தம் போட்டதால் தப்பி ஓடினர்.
சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் பா.விஜய். ஞாபகங்கள், சமீபத்தில் வந்த இளைஞன் படங்களின் நாயகனாக நடித்துள்ளார். இவரது வீடு, வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம், ராகவேந்திரா நகர் பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் பா.விஜய் வெளியூர் சென்று விட்டார்.
அவருடைய மனைவியும், மகளும் மட்டும் வீட்டில் இருந்தனர். பொங்கல் பண்டிகை என்பதால் காவலாளி சொந்த ஊருக்கு சென்று விட்டார். நள்ளிரவில் வீட்டில் ஏதோ பொருட்கள் உருண்ட சத்தம் கேட்டது. இதைக் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த விஜய்யின் மனைவி எழுந்து சென்று பார்த்தார்.
அப்போது அவரது அறையின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அந்த நேரத்தில் 2 வாலிபர்கள் பா விஜய் வீ்ட்டு காம்ப்பவுண்ட் சுவரை எகிறி குதித்து தப்பியோடியதை பார்த்தனர். அவர்கள் கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டில் உள்ள அறைகளின் கதவுகள் அனைத்தும் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தன.
வீட்டின் அறைகள் அனைத்தையும் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு திருட கொள்ளையர்கள் திட்டமிட்டது தெரியவந்தது. ஆனால், பா.விஜய்யின் மனைவி கண் விழித்து சத்தம் போட்டதால், கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர். இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வளசரவாக்கம் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.


Click it and Unblock the Notifications











