பாலாவுக்கு நான் பட்ட நன்றிக்கடன்! - ஆர்கே
தனது நடிப்பு வாழ்க்கையில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த பாலாவுக்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாக தெரிவித்தார் நடிகர் ஆர்கே.
பாலா இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள அவன் இவன் படத்தில் ஹீரோக்கள் ஆர்யா - விஷால் இருவருக்கும் இணையான வேடத்தில் நடித்து, பாலாவிடம் பாராட்டும் பெற்றுள்ளார் ஆர்கே.
உண்மையில் இந்தப் படத்தில் வாய்ப்புக் கேட்கவே இல்லையாம். இவர் வாய்ப்புக் கேட்டுப் போனது நான் கடவுள் படத்துக்காக. ஆனால் அதில் மிகச் சிறிய வேடத்தை அளித்த பாலா, இரு தினங்களுக்குப் பிறகு, உங்களுக்கு இந்த வேடம் வேண்டாம். நான் உரிய நேரத்தில் உங்களைப் பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறி அனுப்பி வைத்தாராம்.
நம்பிக்கை இழந்து வந்த ஆர்கேவை, அவன் இவன் படம் தொடங்கியதும் அழைத்துள்ளார் பாலா. அதன் பிறகு நடந்ததை ஆர்கேவே கூறுகிறார்:
"ஒரு நாள் பாலாவிடமிருந்து அழைப்பு. போனால் அவன் இவன் படத்தில் ஒரு பிரதான வேடத்தைக் கொடுத்து நடிக்கச் சொன்னார். எனக்கு வியப்பு, மகிழ்ச்சி என எல்லாம் கலந்த உணர்வு. அதன் பிறகு ஒன்றரை மாதங்கள் அவர் என்ன சொன்னாரோ அதை மட்டுமே செய்தேன். படம் முடிந்து வந்து என்னைக் கண்ணாடியில் பார்த்தபோது இது நான்தானா என எக்கே சந்தேகம் வந்துவிட்டது.
என் முகத்தில் அத்தனை மாற்றங்கள். நான் வேறு ஆர்கேயாக இருந்தேன். அந்த அளவு என்னை மாற்றியிருந்தார் பாலா. அது மட்டுமல்ல, எனது பகுதி எடுத்து முடிந்தவுடன் அழைத்த பாலா, அருமையா பண்ணீங்க. இனி நீங்கள் வேறு படங்களில் கவனம் செலுத்தலாம், என்றார். பாலா மனம் திறந்து பாராட்டுவது அத்தனை சுலபத்தில் நடக்கிற காரியமா... அன்றுதான் நான் நடிகனாக மாறியதற்கான அங்கீகாரம் கிடைத்ததாக உணர்ந்தேன். ஒரு நடிகனாக அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











