இயக்குநருடன் ஜீவன் மோதல்

கிட்டத்தட்ட பாலச்சந்தரின் பழைய மன்மதலீலையின் உல்டா. ஜீவன் கதாநாயகன். சூரி படத்தை இயக்கிய ஸெல்வன்தான் இயக்குநர். ஆரம்பத்திலிருந்தே இருவருக்கும் சரியான புரிதல் இல்லாமல் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வந்துள்ளன. போகப்போக சரியாகிவிடும் என்று பார்த்தால், நிலைமை இன்னும் மோசமாகி விட்டது.
இரண்டு தினங்களுக்கு முன் படப்பிடிப்புத் தளத்தில் ஸெல்வன் சொல்லிக் கொடுத்த ஒரு காட்சியை தன்னிஷ்டப்படி நடித்திருக்கிறார் ஜீவன். அதோடு நில்லாமல், இந்த ஷாட்டை இப்படி வைத்தால் நன்றாக இருக்குமே என திருத்தங்களும் சொல்ல ஆரம்பித்து விட்டாராம்.
அவ்வளவுதான், ஸெல்வனின் பொறுமைக் கரை உடைந்துபோக, பாய்ந்து விட்டாராம் ஜீவன் மேல்.
நடித்து முழுசா ரெண்டு படம் ஹிட் ஆனதும் கண்ணு மண்ணு தெரியாம போயிடுச்சா... நீ டைரக்டரா, நான் டைரக்டரா என எகிற கைகலப்பு ஏற்படும் அளவுக்கு சூழ்நிலை மோசமாக, உடனே ஒளிப்பதிவாளரும் மற்றவர்களும் அன்றைய படப்பிடிப்பை நிறுத்திவிட்டு இயக்குநரையும், ஹீரோவையும் தனித்தனியாக சமாதானப்படுத்தியிருக்கிறார்கள்.
இருந்தும் மனம் ஆறாத இயக்குநர் இன்னும் செட்டுக்குத் திரும்பவில்லை. ரஜினி, கமல் என ஜாம்பவான்களை ஆட்டிப் படைத்த பாலச்சந்தர் கம்பெனி எடுக்கும் படத்தின் நிலைமையைப் பார்த்தீர்களா.... என புலம்புகிறார்கள் யூனிட்கார்கள்.


Click it and Unblock the Notifications











