திறமைகள் கொட்டிக் கிடக்கும் தமிழ் சினிமா-ஜாக்கி ஷெராப்

எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண் தயாரிக்கும் ஆரண்ய காண்டம் என்னும் புதிய படத்தில் ஒரு நாயகனாக நடிக்கிறார் ஜாக்கி ஷெராப். நிழல் உலக தாதாவாக நடிக்கும் அவருக்கு இது முதல் படம்.
குமார் ராஜா இயக்கும் இந்தப் படத்தின் இன்னொரு நாயகனாக ரவி கிருஷ்ணா நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. ஏற்கனவே வங்கி என்ற தமிழ்-தெலுங்கு படத்தில் ஷெராப் நடித்தது நினைவகூறத்தக்கது.
தமிழில் நேரடியாக நடிப்பது இதுவே முதல் முறை. ஆரண்ய காண்டம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னை வந்த ஜாக்கி ஷெராப் நிருபர்களிடம் பேசுகையில்,
எனக்கு சென்னையுடன் 26 வருட தொடர்புண்டு. தமிழ்த் திரையுலகம் மீது நான் மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறேன். ஒழுக்கம், தொழில் மீது அக்கறை, நல்ல மனிதர்கள் ஆகிய மூன்றையும் இங்கேதான் பார்க்க முடிகிறது. திறமையான டைரக்டர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இங்கேதான் இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் திறமைகள் கொட்டிக் கிடக்கும் திரையுலம் இது.
தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். ரஜினிகாந்த், இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்ற பெரிய கலைஞர்கள் இங்கே இருக்கிறார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்தியில் எனக்காக நிறைய பாடல்களை பாடியிருக்கிறார்.
இந்தியாவை உலக மேப்பில் உன்னத இடத்தில் வைத்த ஏஆர் ரஹ்மான் இந்த மண்ணைச் சேர்ந்தவர்தான்
உத்ரதக்ஷன் என்ற இந்தி படத்தில் நானும், நண்பர் ரஜினிகாந்தும் சேர்ந்து நடித்தோம். அந்த படத்தில் நான் ரஜினிக்கு தம்பியாக நடித்தேன். என் திருமணத்தின்போது தன்னுடைய பிஸியான ஷெட்யூலிலும் மும்பை வந்து என்னை வாழ்த்தியவர் ரஜினி. நண்பர்களை மதிப்பதில் அவருக்கு நிகராக ஒருவரை நான் பார்த்ததில்லை என்றார் ஜாக்கி.
இந்தப் படத்தில் பெங்களூர் மாடல் யாஸ்மின் பொன்னப்பா பிள்ளை நாயகியாக அறிமுகமாகிறார்.


Click it and Unblock the Notifications











