விபத்தை ஏற்படுத்திய காரை சல்மான்கான் தான் ஓட்டினார் - சாட்சியால் வந்த சிக்கல்!
மும்பை: மும்பையில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த சாலை விபத்து தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் சிக்கல் வந்துள்ளது. சம்பவத்தின்போது விபத்தை ஏற்படுத்திய காரை சல்மான்கான் தான் ஓட்டினார் என்று ஒரு முக்கிய சாட்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பந்த்ரா பகுதியில் சல்மான் கான் தனது டயோட்டோ லேன்ட் க்ரூஸர் காரில் வந்து கொண்டிருந்தார். படுவேகமாக வந்த அந்தக் கார், நடைபாதையில் ஏறி அருகில் இருந்த பேக்கரியில் மோதி நின்றது. இந்த கோர விபத்தில் ஒருவர் பலியானார். நான்கு பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து போலீஸார் சல்மான் கான் மீது வழக்குத் தொடர்ந்தனர். முதல் தகவல் அறிக்கையில் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் ரெய்ன் பார் என்ற பாரில் மது அருந்தியுள்ளார் சல்மான் கான். அதன் பின்னர் காரை ஓட்டிச் சென்றுள்ளார். குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தி விட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

10 வருட தண்டனை...
இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சல்மான் கானுக்கு 10 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இழுபறி...
இந்த வழக்கு நீண்ட காலமாக இழுபறியில் உள்ளது. பலமுறை வாய்தாக்கள் வாங்கப்பட்டு வருகின்றன. இடையில் இந்த வழக்கின் முக்கியமான 63 ஒரிஜினல் சாட்சி ஆவணங்கள், கேஸ் டயரிகள் காணாமல் போனதாக பரபரப்பு ஏற்பட்டது.

காணாமல் போன ஆவணங்கள்...
கடந்த ஜூலை மாதம் நீதிபதி தேஷ்பாண்டேவிடம் முக்கிய ஆவணங்கள், கேஸ் டயரிகள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி ஆகஸ்ட் மாதம் வழக்கை தள்ளி வைத்து காணாமல் போனவற்றைக் கண்டுபிடித்து தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

கண்டனம்...
ஆகஸ்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போலீஸாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார் நீதிபதி. மேலும் காணாமல் போனவற்றை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் உத்ரவிட்டார்.

முக்கிய சாட்சி...
இந்த நிலையில் தற்போது காணாமல் போனதைக் கண்டுபிடித்து விட்ட போலீஸார் அதை கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர். இதையடுத்து விசாரணை தொடங்கியது. இந்த விசாரணையின்போது சாட்சிகளில் ஒருவர், சல்மான் கானுக்கு எதிராக சாட்சி அளித்துள்ளார். அவர் கூறுகையில், சல்மான் கான் சம்பத்தின்போது கார் டிரைவர் சீட்டில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

எதிரான முதல் சாட்சி...
சல்மான் கானுக்கு எதிராக பதிவான முதல் சாட்சியம் இதுதான். இதற்கு முன்பு ரெய்ன் பார் மேலாளரும், ஊழியரும் சல்மான் கான் குடித்தாரா என்பது தங்களுக்குத் தெரியாது என்று சாட்சியம் அளித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

தெளிவான விவரமில்லை...
சல்மான் கானுக்கு எதிராக ஒருவர் சாட்சியம் அளித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications











