மோகன்லால் மீது கிரிமினல் மானநஷ்ட வழக்கு!
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மீது கிரிமினல் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் கேரள எழுத்தாளரும் கதாசிரியருமான சுகுமாறன் அலிகோடு.
மலையாள குணசித்திர நடிகர் திலகன் விவகாரத்தில் பிரபல நடிகர் மோகன் லாலுக்கும், எழுத்தாளரும் பேராசிரியருமான சுகுமாறன் அலிக் கோடுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இருவரும் ஒருவரையொருவர் விமர்சித்து பேட்டி அளித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் நடிகர் மோகன்லால் எழுத்தாளர் சுகுமாறன் அலிக்கோடு பற்றி கடுமையாகப் பேசினார்.
மோகன் லாலின் பேச்சு தன்னை அவமானப்படுத்துவதாக உள்ளது எனக் கோரி அவர் மீது சுகுமாறன் அலிக் கோடு திருச்சூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அவர் தனது மனுவில், "நடிகர் மோகன் லால் தன்னை பற்றி பேசும் போது, மூளையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என்று கூறியிருக்கிறார்.
இதன் மூலம் நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க கோரினால் அதற்கு மோகன்லால், "மலையாள நடிகர் சங்கம் இதை பார்த்துக் கொள்ளும்," என்று கூறி மன்னிப்பு கேட்க மறுக்கிறார்.
என்னை அவமானப்படுத்திய மோகன்லால் மன்னிப்பு கேட்பதோடு மட்டுமல்லாமல் ரூ. 10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு மீதான விசாரணை திருச்சூர் கோர்ட்டில் விரைவில் வருகிறது.


Click it and Unblock the Notifications











