வீடு மீது கல்லெறிந்த விவகாரம்: ரசிகர்கள் ஆவேசம்; அரசியலுக்கு வருமாறு விஜய்யிடம் வற்புறுத்தல்!

கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே விஜய் அரசியலில் ஈடுபடுவார் என எதிர் பார்க்கப்பட்டது. இரு மாதங்களுக்கு முன்பே இதற்கான ஆயத்த பணிகளில் இறங்கினார். மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்து கருத்துக்களும் கேட்டார்.
எல்லோரும் ஒட்டு மொத்தமாக அரசியல் கட்சி துவங்க வேண்டும் என வற்புறுத்தினர். இதையடுத்து விஜய் துவக்கிய மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் திடீரென முடிவை மாற்றிக் கொண்டார். அ.தி.மு.க.வுக்கு மக்கள் இயக்கம் ஆதரவு அளிக்கும் என்று அறிவித்ததோடு ஒதுங்கிக் கொண்டார். விஜய்யின் தந்தை மட்டும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்தார்.
இந்த நிலையில் இருதினங்களுக்கு முன் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீடு கல்வீசி தாக்கப்பட்டது.
அவர் படுக்கை அறையை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இந்த வீட்டில் இப்போது விஜய் வசிக்கவில்லை. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வாடகைக்கு குடியிருக்கிறார்.
ஆனாலும் விஜய் வீட்டில் கல்வீசப்பட்டதாக பரவிய தகவல் தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களை ஆத்திரப்படுத்தியது.
மாவட்ட நிர்வாகிகள் பலரும் விஜய்யை நேரில் சந்தித்து அவர் உடனடியாக அரசியலில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்த கல்வீச்சு சம்பவத்தை எப்படி எதிர் கொள்வது என நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம் விஜய்.


Click it and Unblock the Notifications











