குசேலனுக்கு கன்னட சிக்கல்!

ரஜினியின் படங்கள் கர்நாடகத்தில் ரிலீஸாவதற்கு முன்பு ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி கன்னட அமைப்புகள் சில பிரச்சினையைக்கிளப்புவது வழக்கமாகி விட்டது. இப்போது குசேலனுக்கு எதிராக அங்கு கன்னட ரக்சன வேதிகே அமைப்பு போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
ஜூலை 31ம் தேதி குசேலன் ரிலீஸாகிறது. கர்நாடகத்திலும் அதே தேதியில் படத்ைத திரையிட திட்டமிட்டுள்ளனர். ஆனால் குசேலனை திரையிட விட மாட்டோம் என கன்னட ரக்சன வேதிகே அறிவித்துள்ளது.
இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளார். காரணம் படம் திட்டமிட்டபடி வராவிட்டால் ரூ.1.50 கோடி நஷ்டம் ஏற்படுமாம் அவருக்கு.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்க்கும் கர்நாடகத்தைக் கண்டித்து சென்னையில் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின்போது கர்நாடக தலைவர்களை சரமாரியாக விளாசி ரஜினி வீராவேசமாக பேசியதுதான் இப்போது வினையாகியுள்ளது.
இந்த பேச்சின் மூலம் ரஜினி தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் சாதகமாக இருக்கிறார். காவிரிப் பிரச்சினையிலும் அவர் தமிழகத்திற்கு சாதகமாக இருக்கிறார் என்ற எண்ணம் கர்நாடகத்தில் பரவியுள்ளது.
இதன் காரணமாக உலக அளவில் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படும் ரஜினியை, கன்னட ரக்சன வேதிகே வில்லனாக பார்க்க ஆரம்பித்திருக்கிறது. கன்னட மக்களின் நலனுக்கு எதிரானவராக, அவர்களின் உணர்வுகளை மதிக்காதவராக ரஜினியை அவர்கள் வர்ணிக்கின்றனர். ரஜினிகாந்த் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டால்தான் அவரது படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிப்போம் என்று கூறியுள்ளனர்.
ஆனால் எனது படம் கர்நாடகத்தில் திரையிடாவிட்டால் எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை. யாரிடமும் நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று முன்பே ரஜினி கறாராக கூறி விட்டார்.
இந்த நிலையில் குசேலனுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து வேதிகேவின் செயலாளரான தீபக் ஷெட்டி கூறுகையில், ஓகனேக்கல் விவகாரத்தில் வேதிகே உறுப்பினர்களை அவமதித்து விட்டார் ரஜினி. இது எங்களுக்கு மட்டுமல்ல, மொத்த மாநிலத்துக்குமே அவமானமாகும். எனவே அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வேதிகே அமைப்பினர் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். பின்னர் வர்த்தக சபையில் அவர்கள் ரஜினி படத்ைத அனுமதிக்கக் கூடாது என்று மனுவும் கொடுத்தனர்.
இதற்கு என்னதான் தீர்வு?:
அதற்கும் தீபக் ஷெட்டியே ஒரு யோசனையைக் கூறுகிறார். ரொம்ப சிம்பிள். குசேலன் ரிலீஸுக்கு முன்னதாக கன்னடர்களுக்கு எதிராக பேசியதற்காக மன்னித்து விடுங்கள் என்று கர்நாடக மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை ரஜினி கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயம் படத்தை திரையிட விட மாட்டோம். எங்களது கோரிக்கையை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் ஏற்றுக் கொண்டுள்ளது. எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்துள்ளனர் என்றார்.
ஆனால் டபுள் கேம் போல, குசேலன் சிக்கலின்றி ரிலீஸாக உதவுவதாக திரைப்பட வர்த்தக சபை உறுதியளித்துள்ளதாம் விநியோகஸ்தருக்கு.
திரைப்பட வர்த்தக சபை தலைவராக இருக்கும் முன்னாள் நடிகை ஜெயமாலா, இந்தப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளாராம். தமிழ் திரையுலகுக்கு எதிராக கன்னட நடிகர், நடிகையர் பெங்களூரில் நடத்திய போட்டி உண்ணாவிரதத்தில் ஜெயமாலாவும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஜெயமாலா கூறுகையில்,இது எனக்கு பெரிய சவாலாக உள்ளது. ரஜினிகாந்த் மிகப் பெரிய நடிகர். அதில் சந்தேகம் இல்லை. ஈகோவுக்காக அவர் சண்டை போட மாட்டார் என நம்புகிறேன். ரஜினியிடமும் பேசியுள்ளேன். இதுகுறித்து யோசிக்க அவகாசம் தேவை என்று அவர் கூறியுள்ளார். பிரச்சினை நீடிப்பதை அவர் விரும்ப மாட்டார் என நினைக்கிறேன் என்றார்.
வர்த்தக சபையின் துணைத் தலைவரான ராக்லைன் வெங்கடேஷ் (இவர் சில தமிழ்ப் படங்களை தயாரித்து நல்ல லாபம் பார்த்தவர்) கூறுகையில், இந்தப் பிரச்சினையால் தமிழ் மற்றும் கன்னட திரையுலகினருக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையை அமைதியான முறையில் சுமூகமாக தீர்க்க முயற்சிக்க வேண்டும். ரஜினியிடமிருந்து எந்தப் பதிலும் வராவிட்டால், அது தமிழ் திரையுலகுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். அதேபோல கர்நாடகத்தில் உள்ள விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.
குசேலன் வருகைக்காக அனைவரும்காத்திருக்கிறார்கள். இதற்காக நிறையப் பணத்தை செலவிட்டுள்ளனர். வேதிகே திட்டமிட்டபடி போராட்டத்ைத நடத்தினால் எங்களுக்கு பெரும் பாதிப்பும், நஷ்டமும் ஏற்படும் என்றார்.
இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் இந்தப் பிரச்சினையில் இறங்கியுள்ளன. மாற்று ஏற்பாடுகள், தீர்வுகள் குறித்து யோசித்து வருகின்றனராம்.
ரஜினி இந்தப் பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











