தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி வார்டுக்கு திரும்பினார் ரஜினி-ஆர்வத்துடன் கிரிக்கெட் பார்த்தார்

அவரது உடல்நிலை வேகமாக முன்னேறிவருகிறது. வைரஸ் தொற்று அகற்றப்பட்டுள்ளது. சுவாசம் சீரடைந்ததால், சிறுநீரகங்களின் செயல்பாடும் வழக்கத்துக்கு திரும்பியுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினமே அவரது உடல்நிலை சகஜநிலைக்குத் திரும்பினாலும், தொடர்ந்து விவிஐபி பார்வையாளர்கள் வரக்கூடும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காக மேலும் ஒரு நாள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைத்திருந்தனர்.
இப்போது அவருக்கு நோய்த் தொற்று அபாயம் நீங்கியபடியால், அவர் முன்பு தங்கியிருந்த சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
"ரஜினி உற்சாகமாக உள்ளார். இன்று மாலை சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஆர்வத்துடன் டிவியில் பார்த்தார் ரஜினி. அவருடன் அவரது குடும்பத்தினர் உள்ளனர்," என ராமச்சந்திரா மருத்துவமனை சிறப்பு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் பார்வையாளர்களுக்கு மேலும் சில நாட்கள் அனுமதியில்லை என்றும், அவருக்கு நோய்த் தொற்று அபாயம் இனி இல்லை என மருத்துவ நிபுணர் குழு உறுதிசெய்த பிறகே பார்வையாளர்கள் வரலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 5 தினங்களாக ஐசியுவில் இருந்தார் ரஜினி. எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











