ரசிகர்கள் கட்டுப்பாட்டை மீறினால் மன்றத்தைக் கலைக்கவும் தயங்கமாட்டேன்-அஜீத்

அஜீத் நடித்துவரும் மங்காத்தா படத்தின் ஷூட்டிங்கில் அத்துமீறி நுழைந்த சில ரசிகர்கள், தங்களுடன் அஜீத் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். இதனால் டென்ஷனான அஜீத், தொழில் நடக்குமிடத்தில் இப்படி கலாட்டா செய்யக் கூடாது என அறிவுத்தி அனுப்பினாராம்.
இதைத் தொடர்ந்து தனது அனைத்து ரசிகர்களுக்கும் அவர் ஒரு செய்தி விடுத்துள்ளார். அந்த அறிக்கை:
"சமீபத்தில் ஒரு சில கசப்பான செய்திகள் என் கவனத்தில் கொண்டு வரப்பட்டது.
எனது ரசிகர்கள் கண்ணியமானவர்கள் என்றுமே என் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற என் கணிப்பிற்கு மாறாக, எனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் எனது தலைமை ரசிகர் நற்பணி இயக்கத்தின் அறிவுரையையும் மீறி சுய விளம்பரத்திற்காக ஒரு சில கூட்டம் நடத்த விருப்பதாகவும், அதற்கு ஆதரவு வேண்டி எனது இயக்கத்தின் சக உறுப்பினர்களிடையே விஷமப்பிரச்சாரம் செய்வதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
நான் என்றுமே எனது ரசிகர்களை சுயலாபத்திற்காக உபயோகப்படுத்தியதில்லை. உபயோகப்படுத்தவும் மாட்டேன்.
புகைப்படம் எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தல், நேரில் சந்திக்க கோரி படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து முற்றுகை செய்தல் ஆகிய காரியங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
என் மேல் உண்மையான ரசிகர்கள் இத்தகைய காரியங்களை தவிர்த்து அதில் ஈடுபடுவோரையும் நிராகரிக்க வேண்டும்.
என்னுடைய கருத்துக்கு எதிர்ப்பா, ஆதரவா என்று நிர்ணயிக்கும் பொறுப்பை பொது மக்களிடையே விட்டு விடுகிறேன்.
எனது ரசிகன் சமூகத்தில் கண்ணிய மிக்க மனிதன் என்று பெயரெடுப்பதையே விரும்புகிறேன். மாறிவரும் காலகட்டத்தில் பொதுமக்கள் எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நான் என்றுமே அன்புக்கு கட்டுப்பட்டவன். எவ்விதமான நிர்ப்பந்தத்திற்கும் அடிபணிய மாட்டேன் என்பதை எனது உண்மையான ரசிகர்கள் அறிவர்.
இனிமேல் மேற்கண்ட இத்தகைய செயல்களில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கெடுத்தல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் என்று என் கட்டளைய மீறி செயல்பட்டால் என் பொறுப்பில் இயங்கும் நற்பணி இயக்கத்தை கலைக்கவும் தயங்கமாட்டேன்,"" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











