நாளையை பற்றி மட்டுமே யோசிப்பேன்!-ரஜினி

By Staff

Rajini
நான் எப்போதுமே நாளையைப் பற்றி மட்டும்தான் யோசிப்பேன். நாளை மறுநாளைப் பற்றி யோசிக்க மாட்டேன் நடிகர் ரஜினிகாந்த்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த 15ம்ந் தேதி முதல், நாடக விழா நடைபெற்று வந்தது. நேற்று விழாவின் நிறைவுநாள்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகியோர் நடித்த 'வெற்றி வெற்றி வெற்றி' என்ற நாடகம் நடைபெற்றது.

இந்த விழாவில் ரஜினி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு கேடயம் வழங்கி கெளரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:

நான் பொதுவாக எல்லா விழாக்களுக்கும் சரியான நேரத்துக்குப் போய் விடுவேன். இந்த நிகழ்ச்சி நமது குடும்ப விழா. நமது சகோதர, சகோதரிகள் இங்கு இருக்கிறார்கள் என்பதால், கொஞ்சம் தாமதமாக வந்தேன். உண்மையாகவே ரொம்ப வித்தியாசமான நிகழ்ச்சி இது.

உள்ளே விட மறுத்த காவலாளி...

1979ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டி முடிக்கப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது. அப்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தலைமையில் சிவாஜி நடித்த 'அசோக சக்கரவர்த்தி' நாடகம் நடைபெற்றது.

நான் 'ஷூட்டிங்' முடித்து விட்டு, ஒரு ஸ்கூட்டரில் நடிகர் சங்கத்துக்கு வந்தேன். போலீஸ்காரர்கள் என்னை உள்ளே விடவில்லை. என்னை யார் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அதன்பிறகு சிலர் வந்து, 'இவர்தான் ரஜினிகாந்த்' என்று என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

உள்ளே உட்காரக்கூட இடம் கிடைக்கவில்லை. நின்று கொண்டே நாடகத்தை பார்த்து ரசித்தேன். அதன்பிறகு சில கசப்பான சம்பவங்கள் நடந்தன. இப்போதுதான் மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.

சரத்குமார், இங்கே நாடகத்தில் நடித்தார். அவரிடம் 'நீங்கள் ஏற்கனவே நாடகத்தில் நடித்திருக்கிறீர்களா?' என்று கேட்டேன். 'பழக்கம் இல்லை, இதுதான் முதல் அனுபவம்' என்று சொன்னார்.

எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷனில் 'வேலைக்காரன்' படத்தில் நான் நடித்தபோது, குறிப்பிட்ட ஒரு சீனில் குழப்பம் ஏற்பட்டது. அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த வி.கே.ராமசாமி, டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இருவரும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வி.கே.ராமசாமி என்னை அழைத்து, 'நீ நாடகத்தில் நடித்து இருக்கிறாயா?' என்று கேட்டார். 'நடிச்சிருக்கேன்'னு சொன்னேன். 'மேடை நாடகங்களில் நடித்தால்தான் நடிகர்களுக்கு 'டைமிங் சென்ஸ்' வரும்' என்று சொன்னார்.

என் நடிப்புலக அறிமுகமே மேடையில்தான் நடந்தது. நான் பஸ் கண்டக்டராக இருந்தபோது 25 நாடகங்களில் நடித்தேன். அதைப் பார்த்து என் நண்பர்கள், 'நீ சினிமாவுக்கு போனால் பெரிய ஆளாகி விடுவாய்' என்று ஏத்திவிட்டுட்டாங்க. அப்படியே நான் சென்னை வந்து திரைப்பட கல்லூரியில் 2 வருடங்கள் நடிப்பு பயிற்சி பெற்றேன். என்னுடைய நாடக நடிப்பை கே.பாலசந்தர் சார்தான் மாத்தினார்.

நாளை பற்றி மட்டும்தான் யோசிப்பேன்!

கலை உலகின் மிகப்பெரிய மகான்களான என்.டி.ராமாராவ், சிவாஜி, ராஜ்குமார் போன்றவர்களின் கடைசி காலகட்டத்தில் அவர்களுடன் பழகுகிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த மகான்கள் நாடக கலையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினார்கள். இதுதொடர்பாக நானும் அவர்களிடம் பேசி இருக்கிறேன்.

நாடகத்தில் நடிக்கும்போது கிடைக்கும் சந்தோஷம், வேறு எதிலும் கிடைக்காது. நான் எப்போதுமே நாளையை பற்றி யோசிப்பேன். நாளை மறுநாளைப் பற்றி யோசிக்க மாட்டேன்.

நாடக நடிகர்-நடிகைகளுக்கு நடிப்பது எப்படி, பார்ப்பது எப்படி, வசனம் பேசுவது எப்படி என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் பணம் சம்பாதிப்பது எப்படி என்று மட்டும் சொல்லிக் கொடுப்பது இல்லை. அதுதான் தலைவிதி. சம்பாதித்த பணத்தை எப்படி கட்டிக்காப்பது என்றும் நாடக நடிகர்களுக்கு தெரியாது.

பொழுதுபோக்காக ஆரம்பித்து பிழைப்பாக மாறுவது இரண்டு விஷயங்களில்தான். ஒன்று கலை, இன்னொன்று விளையாட்டு. கலைஞர்களுக்கு பணம் இருந்தால் பொழுது போய்விடும். பணம் இல்லை என்றால், விடிந்தாலே கஷ்டம். இங்கே மனோரமா பேசும்போது, கலைஞர்களுக்கு வயது ஆகக்கூடாது என்று கூறினார். உடம்புக்கு வயது ஆவதை தடுக்க முடியாது. மனதுக்கு வயது ஆகாமல் தடுக்க முடியும்.

தங்கத் தட்டில் தேங்காய்!

நடிகர் சங்கத்துக்கு நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். என்ன விஷயமாக இருந்தாலும், மனநிறைவோடு செய்ய வேண்டும்.

நடிகர் சங்கம் இருப்பது தி.நகரில். அதுவும் 18 கிரவுண்டில். இந்த இடத்தை வைத்துக்கொண்டே ஒரு மாதத்தில் சில லட்சங்கள் வருமானம் பார்க்கலாம். 18 கிரவுண்டு நிலத்தை வைத்துக்கொண்டு வருமானம் இல்லாமல் இருப்பது தங்கத் தட்டில் தேங்காய் விற்பது போலாகி விடும்.

இப்போது நடப்பது உங்கள் ஆட்சி. கலைஞர் முதல்வராக இருக்கிறார். ஆச்சி மனோரமா போன்றவர்கள் அவரிடம் சென்று நடிகர் சங்கத்துக்கு உதவ வேண்டும் என்று சொன்னால், அவர் தட்ட மாட்டார். அந்த இடத்தை வளர்ச்சியடையச் செய்து வருமானம் வருகிற மாதிரி செய்யலாம். அழகான திரையரங்கத்தை உருவாக்கலாம். இதுபற்றி தீவிர ஆலோசனை நடத்த வேண்டும். நடிகர் சங்கம் உருவாவதற்கு காரணமான எம்.ஜி.ஆர்., சிவாஜி, நடிகர் சங்க கடனை அடைப்பதற்கு பாடுபட்ட விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி போன்றவர்களை மறக்க முடியாது என்றார் ரஜினி.

நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் எம்.என்.ராஜம், முதல் பெண் தலைவர் அஞ்சலிதேவி ஆகிய இருவரும் விழாவில் கெளரவிக்கப்பட்டனர்.

விழாவில், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோரும் பேசினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X