நடிகர் குணால் மரணம் - மறு விசாரணைக்கு உத்தரவு

காதலர் தினம் மூலம் நடிகரானாவர் மும்பையைச் சேர்ந்த குணால். அதன் பின்னர் பார்வை ஒன்றே போதுமே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் வாய்ப்புகள் மங்கவே மும்பை திரும்பினார்.
அங்கு பெரிய அளவில் ஹீரோவாக அவர் எடுபடவில்லை. இதனால் ரியல் எஸ்டேட் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டிருந்தார்.
அவருக்கு அனுராதா என்ற மனைவியும், குழந்தைகளும் உண்டு. கருத்து வேறுபாட்டால் அனுராதா, தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு போய் விட்டார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி மும்பையில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் குணால் பிணமாகக் கிடந்தார்.
மின் விசிறியில் அவரது பிணம் தொங்கியது. மரணம் சம்பவித்த சமயத்தில், குணாலின் காதலியான இளம் நடிகை லவீனா அங்கிருந்தார்.
குணாலின் சாவில் மர்மம் இருப்பதால், கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று அவரது தந்தையும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியுமான ராஜேந்திர சிங் போலீஸில் புகார் கொடுத்தார்.
ஆனால் குணால் தற்கொலையின் போது, வீட்டில் உடனிருந்த நடிகை லவீனா, தான் வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, குணால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என போலீசில் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து இதை தற்கொலை வழக்காகக பதிவு செய்து போலீஸார் பைலை மூடி விட்டனர்.
இந்த நிலையில், ராஜேந்திரசிங், கடந்த ஜுலை மாதம் தனது மகன் சாவில் மர்மம் உள்ளதாகவும், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாகவும், எனவே இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், குணால் சாவு வழக்கினை சரியாக விசாரிக்காத 2 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும். மீண்டும் புதிதாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.
இது தொடர்பான விசாரணை அறிக்கையை மும்பை போலீஸ் கமிஷனர் 2 வாரத்தில் தாக்கல் செய்யவேண்டும்.
குணால் பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர், பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கையுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து குணால் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











