சிம்பு மாறிட்டாரு...

சிம்பு என்றால் வம்பு என்று கூறும் அளவுக்கு அவரைப் பற்றி நிறைய செய்திகள் வந்து விட்டன. அப்படி ஆகி விட்டது நிலைமை. ஆனால் முதல் முறையாக சமர்த்தாக நடிக்கிறார் சிம்பு என விண்ணைத் தாண்டி வருவாயா யூனிட்டார் நற்சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
இயக்குநர் சொல்வதை மட்டும் கேட்டு நடிக்கிறார். அவருடைய எந்தப் பணியிலும் தலையிடுவதில்லை. சமர்த்தாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் யூனிட் வட்டாரத்தினர்.
இப்படத்தில் திரிஷாவுடன் ஜோடி சேருகிறார் சிம்பு. அலை படத்திற்குப் பின்னர் இருவரும் இணையும் படம். தற்போது கேரள மாநிலம் ஆலப்புழையில் ஷூட்டிங் நடந்து வருகிறது.
பத்து நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கிறதாம். கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்திற்காக இங்கு வந்திருந்தார் கெளதம். அதன் பின்னர் இந்த இடம் அவருக்கு மிகவும் பிடித்துப் போகவே தொடர்ந்து ஆலப்புழையில் சில காட்சிகளை வைக்க ஆரம்பித்துள்ளார் கெளதம்.
வேட்டையாடு விளையாடு மற்றும் வாரணம் ஆயிரம் படத்தின் சில காட்சிகளை இங்கு எடுத்துள்ளார் கெளதம் மேனன்.
தற்போது இதுவரை இந்திய சினிமா எதிலும் வராத சில அழகிய லொகேஷன்களில் பாடல் காட்சி ஒன்றையும், சில படக் காட்சிகளையும் இங்கு படமாக்கி வருகிறாராம் கெளதம்.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஜூலை மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.


Click it and Unblock the Notifications











