மீண்டும் பலே பாண்டியா!

திருட்டுப் பயலே, சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய இரு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம்தான் பலே பாண்டியா.
விளம்பர டிசைனராக பிரபலமாக இருக்கும் சித்தார்த் சந்திரசேகர் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சிவாஜி, தசாவதாரம், கஜினி, அந்நியன், சந்திரமுகி, வேட்டையாடு விளையாடு, ஜெயம்கொண்டான், சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், பருத்தி வீரன், உன்னாலே உன்னாலே உள்ளிட்ட படங்களுக்கும், வரப் போகும் எந்திரன், கந்தசாமி, சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களுக்கு விளம்பர டிசைனராக பணியாற்றியுள்ளார் சித்தார்த்.
பலே பாண்டியா படத்தை எழுதி, இயக்கவிருக்கிறார். பிரசன்னாதான் நாயகன்.
கல்பாத்தி அகோரம் படத்தை பிரமாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளார்.
குருதேவ் கேமராமேனாகப் பணியாற்றவுள்ளார். ஏகப்பட்ட ஹிட் பாடல்களைப் பாடியுள்ள பிரபல பின்னணிப் பாடகர் தேவன், இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
பிரபல பத்திரிக்கையாளரும், கார்ட்டூன் கலைஞருமான மதன் படத்திற்கான வசனத்தை எழுதவுள்ளார். அன்பே சிவம், காஞ்சீவரம் ஆகிய படங்களுக்கும் மதன்தான் வசனகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தக்கால பலே பாண்டியாவுக்கும், இந்தப் புதிய பலே பாண்டியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம் - தலைப்பைத் தவிர.
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு திறமை இருக்கும், சிறப்பம்சம் இருக்கும். அது அவனுக்கே கூட தெரியாமல் இருக்கும். அப்படிப்பட்ட ஒருவன்தான் இந்தப் படத்தின் நாயகன். அவனே, அவனை ஒரு நாள் உணர்ந்து கொள்கிறான். இந்தக் கதையை காமெடி கலந்து கலக்கலாக கொடுக்கப் போகிறாராம் சித்தார்த் சந்திரசேகர்.
ஜனவரியில் சென்னையி்ல ஷூட்டிங்கைத் தொடங்கி அப்படியே மும்பை, கேரளா என படத்தை வளர்க்கப் போகிறார்கள்.
ஏகன் படத்தின் இயக்குநரான ராஜு சுந்தரம், இப்படம் மூலம் மீண்டும் டான்ஸ் மாஸ்டராக திரும்பி வருகிறார்.


Click it and Unblock the Notifications











