அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா... நடிகர் ஆர்கே பங்கேற்பு!

அமீரகத் தமிழ் மன்றத்தினர் வேட்டி - சட்டை அணிந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சியைத் துவங்க பள்ளி மாணவ மாணவியரின் கண்கவர் நடனங்கள் நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்த்தன.
'குத்துப் பாடல்களுக்கு' மட்டுமே நடனம் ஆடும் கலாசாரத்தை மாற்றி வரிகளில் செறிவு கொண்ட பாடல்களுக்கு மட்டும் நடனமாடியது சிறப்பாக அமைந்தது. நிகழ்ச்சியை அமைப்பின் இணைச் செயலாளர் ஜெஸிலா தொகுத்து வழங்கினார்.
நடனங்களுக்குப் பிறகு கணினியில் இலவச மென்பொருட்களைக் கொண்டு தமிழை உள்ளீடு செய்வது குறித்த செயல்முறை விளக்கம் ஒலி ஒளிக்காட்சியாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து நிகழந்த பலகுரல் நிகழ்ச்சியின் மூலமாக தமிழகத்திலிருந்து சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த ரோபோ சங்கர் பார்வையாளர்களை மகிழ வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களான அழகர்மலை ஹீரோ ஆர்கே, நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோருக்கும் ஈடிஏ குழும மின் மற்றும் இயந்திரவியல் துறை இயக்குனர் அன்வர் பாஷா ஆகியோருக்கு அமைப்பின் நிர்வாகிகள் மரியைதை செய்தனர்.
விழாவில் உரையாற்றிய அன்வர் பாஷா அமீரகத் தமிழ் மன்றத்தின் செயல்பாடுகளைப் பாராட்டினார். கஞ்சா கருப்பு பேசுகையில் தாய்மண்ணை விட்டு விலகி நிற்கும் போதும் தமிழை மறக்காமல் தமிழ் விழாவில் ஒன்று கூடியிருக்கும் தமிழர்களைப் பார்த்து மகிழ்வதாகக் குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினர் ஆர்கே தனது உரையின் போது தமிழ் மக்கள் ஏன் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி எவ்வாறு முன்னேற முயற்சிக்க வேண்டும் என்பதைச் சிறுகதைகள் மூலம் எடுத்துக் கூறினார்.
ஆண்டு விழா மலரை ஆர்கே வெளியிட கஞ்சா கருப்பு, அன்வர் பாஷா ஆகியோர் பெற்றுக் கொண்டனர் அமைப்பின் சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து வந்திருந்த சிவகார்த்திகேயன் தனது பலகுரல் நிகழ்ச்சி மூலம் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினார்.
நிகழ்ச்சியின்போது தமிழகத்திலிருந்து கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார், கவிக்கோ அப்துல் ரஹ்மான், நடிகர் சிவக்குமார், இயக்குனர் மீரா. கதிரவன், கலைஞானி கமல்ஹாஸன் ஆகியோர் அமீரகத் தமிழ் மன்றத்திற்கு வழங்கிய வாழ்த்துரைகளின் காணொளி ஒளிபரப்பப்பட்டது.


Click it and Unblock the Notifications











