கமல்ஹாசனின் 'ஹ்ருதயராகம்'

125 இளம் சிறார்களின் இருதய அறுவைச் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக, உலக மலையாளிகள் கவுன்சில் இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சென்னை மாகாண உலக மலையாளிகள் கவுன்சில், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை, மலையாள மனோரமா ஆகியவை இணைந்து 125 இளம் சிறார்களுக்கு இருதய அறுவைச் சிகிச்சையை நடத்தவுள்ளன. இதற்குத் தேவையான நிதியை இசை நிகழ்ச்சி மூலம் வசூலிக்க முடிவு செய்தன.
இந்தத் திட்டத்திற்கு ஹ்ருதயராகம் -2008 என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் இதன் திட்ட தூதராக செயல்படுகிறார். தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நிதி திரட்டித் தரவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ஷோபா ஹ்ருதயராகம் -2008 இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த இன்னிசை இரவு நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மலையாளத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பங்கேற்றனர். வித்யாசாகர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கமல்ஹாசன் கலந்து கொண்டு பாடியது அமைந்தது. எந்தவித முன்னேற்பாடும், தயார் நிலையும் செய்து கொள்ளாமல் கேஷுவலாக மைக்கைப் பிடித்த கமல், பாடத் தொடங்கினார்.
அவர் பாடத் தொடங்கியபோது கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று இடைவிடாமல் கைதட்டி கமல்ஹாசனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதனால் உற்சாகமான கமல், தனது பழைய பாடல் நினைவுகளில் மூழ்கினார்.
'நினைவோ ஒரு பறவை' என்ற பழைய, இனிய பாடலை பாடி கூட்டத்தினரை மகிழ்வித்தார்.
அதே குரலில், அதே இனிமையுடன் கமல் பாடியதைப் பார்த்து கூட்டத்தினர் ஆச்சரியத்துடன் ரசித்தனர்.
மலையாள இசையமைப்பாளர்கள் நடத்திய அடிபொலி கச்சேரியும் கூட்டத்தினரை மகிழ்வித்தது. ஆயிரக்கணக்கான மலையாளிகள் இந்த இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் வசூலான ரூ. 75 லட்சத்திற்கான காசோலையை கமல்ஹாசன், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை இயக்குநர்களான டாக்டர் ஜான், தாமஸ், வர்கீஸ் ஈப்பனிடம் வழங்கினார். மலையாள மனோரமாவின் லால் ஜோஹன், உலக மலையாளிகள் கவுன்சிலைச் சேர்ந்த பிரவீன், அச்சுதன், அனூப், ஸ்ரீதர் ஆகியோரும் உடன் இருந்தனர்.


Click it and Unblock the Notifications











