இனி மிஷ்கினும் ஹீரோ!

கோலிவுட்டின் ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் படத்தை வெற்றிகரமாக ஓட வைக்கும் திறன் கொண்ட அரிய இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் மிஷ்கின். இவரது முதல் படமான சித்திரம் பேசுதடி அனைத்து சென்டர்களிலும் அபாரமாக ஓடி சாதனை படைத்தது.
தொடர்ந்து சமீபத்தில் வெளியான 2வது படமான அஞ்சாதேவும் வெற்றிப் படமாகியுள்ளது.
அஞ்சாதேவில் ஒரு பாடலையும் பாடி அசத்திய மிஷ்கின், அடுத்து நடிகராக அவதாரம் எடுக்கிறார்.
தனது அடுத்த படத்திற்காக சூர்யாவை அணுகினார் மிஷ்கின். கதையைக் கேட்ட சூர்யா ரொம்பவே இம்ப்ரஸ் ஆகி விட்டார். ஆனால் 2009ம் ஆண்டு கடைசி வரை அவரால் கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலை. அதுவரை காத்திருக்க முடியுமா என்று மிஷ்கினிடம் கேட்டுள்ளார் சூர்யா.
ஆனால் ஏற்கனவே ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த கதையை வைத்துக் கொண்டு பொருத்தமான ஹீரோவுக்காக காத்திருப்பதாகவும், இனிமேலும் தாமதம் செய்ய முடியாதே என்று கூறியுள்ளார் மிஷ்கின்.
மிஷ்கின் நிலைய உணர்ந்த சூர்யா, தனது நிலையை எடுத்துச் சொல்லி, வேறு ஹீரோவைப் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து புதுமுக ஹீரோ ஒருவரைப் பார்த்தார் மிஷ்கின். ஆனால் கேரக்டருக்கு அவர் பொருந்தி வரவில்லை. யோசித்துப் பார்த்த மிஷ்கின், பேசாமல் தானே ஹீரோவாக நடிக்க முடிவு செய்தார்.
இதையடுத்து முதல் கட்டமாக தனது உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார். அதன் பின்னரே தனது ஹீரோ அவதாரத்தை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்கவுள்ளார்.
கடுமையான உடற்பயிற்சிக்குப் பின்னர் பல கிலோ எடை குறைந்து ஸ்லிம் ஆகியுள்ளாராம் மிஷ்கின். பார்க்க படு ஸ்மார்ட் ஆகவும் மாறியுள்ளார். தாடியையும் தூக்கி விட்டார். முடியையும் சீர்படுத்தி விட்டார். மொத்தத்தில் ஹீரோ ரேஞ்சுக்கு மாறி விட்டார்.
இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும் எனத் தெரிகிறது. முதல் காப்பி அடிப்படையில் இப்படத்தை ரூ. 4.50 கோடி மதிப்பில் ஐங்கரன் தயாரிக்கவுள்ளதாம்.
இந்தப் படத்தில் முதல் முறையாக மிஷ்கின், இசைஞானி இளையராஜாவுடன் கை கோர்க்கிறார். ஏற்கனவே 6 பாடல்களையும் போட்டுக் கொடுத்து விட்டாராம் ராஜா. மகேஷ் முத்துச்சாமி கேமராவைக் கையாள, மிஷ்கினே இயக்குகிறார்.
ஜூன் மாதம் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











