'நானும் ஒரு மாணவன்...!'-கமல்

திரைக்கதை பயிலரங்கம் எனும் பெயரில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் ஒன்றை கிண்டியில் ஐஐடி கல்வி நிறுவன வளாகத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நடத்துகிறது. ஐஐடி நிறுவனமும் இதில் கை கோர்த்துள்ளது.
இன்று தொடங்கி வரும் ஜூன் 3ம் தேதி வரை 6 தினங்கள் நடக்கும் இந்த கருத்தரங்கின் முறையான துவக்க விழா நேற்று ஐஐடியில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது:
ஒரு படத்தின் வெற்றிக்கான சூட்சுமம், படத்தை பார்க்க வைக்கும் தந்திரம் அடங்கியிருப்பது திரைக்கதையில்தான். அதை முறையாகக் கற்றுக் கொள்வதால் நிறைய அனுகூலங்கள் உள்ளன.
திரைக்கதை தொடர்பான சர்வதேச கருத்தங்கம் ஒன்றை சென்னையில் நடத்த வேண்டும் என்று நானும் இயக்குநர் பாலுமகேந்திராவும் அடிக்கடி பேசிக் கொண்டிருப்போம். இத்தனை நாட்களாக அது எங்கள் கனவாகவே இருந்தது. அந்த கனவு இப்போதுதான் நனவாகி இருக்கிறது.
படங்களுக்கு வெற்றிவிழா கொண்டாடுவதுபோல், இதுவரை நாங்கள் செய்த வேலைகளுக்கு இது வெற்றிவிழா என்றே நினைக்கிறேன்.
சினிமாவைப் பொறுத்தவரையில் நான் இன்னும் மாணவன்தான். ஒரு மாணவனாக இருந்து நிறையே விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.
மாணவனாக இருப்பதற்கு திமிர் வேண்டும். அந்த திமிர் எனக்கு இருக்கிறது. எனக்கு பிறகு சினிமாவில் நுழைந்த மணிரத்னத்திடமிருந்து நிறையே தெரிந்து கொண்டிருக்கிறேன்.
புனே திரைப்படக் கல்லூரியை புகழ் பெற்ற பயிற்சி நிறுவனமாக சொல்வார்கள். கம்ப்யூட்டர், இண்டர்நெட் வசதி இல்லாத அந்த காலத்தில் எனக்கு ஒரு புனே திரைப்படக் கல்லூரியாக இருந்தவர் டைரக்டர் பாலுமகேந்திராதான். அவரிடம் அடிக்கடி உரையாடி சினிமா தொடர்பான பலவற்றை கற்றிருக்கிறேன் என்றார் கமல்.
ஐஐடியில் படித்திருப்பேன்..!
பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார். அப்போது கூறுகையில், நான் படிப்பை பாதியிலேயே விட்டவன். ஒருவேளை நான் தொடர்ந்து படிக்கும் சூழல் வாய்த்திருந்தால் ஐஐடியில் சேர்ந்திருப்பேன்.
ஒரு படத்தின் திரைக்கதையை விமர்சிக்கும்போது, அது எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்றுதான் பார்க்க வேண்டும். எனக்கு சரி எனத் தோன்றுவது மற்றவருக்கு தவறாகவும் தோன்றக் கூடும். அது அந்தக் கதையின் தன்மைக்கேற்ப மாறும் என்றார்.
முன்னணி திரைப் பிரமுகர்கள், இயக்குநர்கள் அனைவருமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இன்று துவங்கும் இந்த கருத்தரங்கில் ஹாலிவுட்டைக் கலக்கும் இந்திய இயக்குநர் சேகர் கபூர், பாலிவுட்டின் கோவிந்த் நிஹ்லானி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பங்கேற்று திரைக்கதை நுணுக்கங்கள் குறித்து விவாதிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











